நாகப்பட்டினம்,ஜூன்.5-
நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு மீதமுள்ள குப்பைகள் பனங்குடி பிராவடையான் ஆறு அருகில் கொட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று கொட்டி இருந்த குப்பைகளை எரியூட்டியதால் புகை மண்டலம் நாகப்பட்டினம்-கும்பகோணம் சாலையில் சூழ்ந்தது. இதனால் போக்குவரத்து தடைப்பட்டு வாகன ஓட்டிகள் மிகுந்த அவதி அடைந்தனர்.

மேலும் இந்த புகையால் அருகில் உள்ள மரைக்கான்சாவடி கிராம மக்களுக்கு பல்வேறு சுவாச பிரச்சனைகள் ஏற்படுவதாக கோரி குப்பைகளை ஏற்றி வந்த பேரூராட்சிக்கு சொந்தமான டிராக்டர் மற்றும் டாடா ஏசி வாகனங்களை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பேரூராட்சி செயல் அலுவலர் கலியபெருமாள், இளநிலை உதவியாளர் சாமிநாதன் மற்றும் திட்டச்சேரி போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் திருமருகலில் இருந்து தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.