திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் சுற்றுச்சூழல் தின விழா கடைப்பிடிக்கப்பட்டது.
திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப்செயலர் விஜயகுமார் துவக்க உரையாற்றினார் . தலைவர் லால்குடி விஜயகுமார் தலைமை தாங்கினார்.
நிறுவனர் நாசர், துணைத் தலைவர் காசிநாத்,அன்பழக பாண்டியன், ஜலால் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். அஞ்சல் தலை சேகரிப்பாளர் இளம்ழுதி சுற்றுச்சூழல் தினம் குறித்து பேசுகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5 அன்று சர்வதேச சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை உலக மக்களிடையே ஏற்படுத்தவும், இயற்கை வளங்களைப் பேணிக்காக்க உறுதியேற்கவும் ஐக்கிய நாடுகள் சபை இத்தினத்தை முன்னெடுக்கிறது.1972-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் மனித சுற்றுச்சூழல் மாநாட்டில் இத்தினம் அறிவிக்கப்பட்டு, 1973 முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
நோக்கமானது பருவநிலை மாற்றம், பிளாஸ்டிக் மாசுபாடு மற்றும் காடழிப்பு போன்ற அவசர சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்த உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகும். இத்தினத்தில் மரம் நடுதல், தூய்மைப் பணிகள், பிளாஸ்டிக் தவிர்ப்பு மற்றும் விழிப்புணர்வுப் பேரணிகள் போன்றவை முன்னெடுக்கப்படுகின்றன.
அவ்வகையில் நெகிழி மாசுபாட்டை முறியடிப்போம்” என்ற கருப்பொருளுடன் உலக சுற்றுச்சூழல் தினத்தை நினைவுகூறும் வகையில், ஜூன் 5, 2018 தேதியிட்ட இந்திய அஞ்சல் துறையின் முதல் நாள் உறையினை காட்சிப்படுத்தி, சுற்றுச்சூழல் கருப்பொருள்களையும் நெகிழி மாசுபாட்டிற்கு எதிரான நடவடிக்கைகளையும் சித்தரிக்கும்நான்கு 500 பைசாஅஞ்சல் தலைகள் இடம்பெற்றுள்ளதை எடுத்துரைத்தார்.
அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் எங்கள் பூமியை நெகிழி (பிளாஸ்டிக்) மாசில்லாத தூய்மையான சூழலாக மாற்றவும், நமது இயற்கை வளங்களையும் எதிர்கால சந்ததியினரையும் காக்கவும் நான் உளமாற உறுதி அளிக்கிறேன். ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பொருட்களைத் தவிர்த்து, எனது அன்றாட வாழ்வில் துணிப்பைகள் போன்ற சூழலுக்கு உகந்த மாற்றுகளை பயன்படுத்துவேன். இயற்கைக்குத் தீங்கு விளைவிக்கும் நெகிழிப் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்க எனது பங்களிப்பை முழுமையாகத் தருவேன் என உறுதியேற்றனர். முன்னதாக முஹம்மது சுபேர் வரவேற்க, நிறைவாக சிவகுமார் நன்றி கூறினார்.