கோவையில் உள்ள கொடிசியா வர்த்தகக் கண்காட்சி வளாகத்தில், உணவுத் துறையை மையமாகக் கொண்ட 6 முக்கிய கண்காட்சிகள் ஜூலை 1 முதல் 3 வரை நடைபெறுகின்றன. சினர்ஜி எக்ஸ்போஷர்ஸ் அண்ட் ஈவென்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஏற்பாடு செய்யும் இந்த மாபெரும் ஒருங்கிணைந்த நிகழ்வில், 36 நாடுகளைச் சேர்ந்த 30,000-க்கும் மேற்பட்ட தொழில்துறை வல்லுநர்கள் பங்கேற்கின்றனர்.
இந்திய அரசின் உணவு பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சகம், MSME அமைச்சகம், இந்திய மசாலா வாரியம், தேசிய மஞ்சள் வாரியம் ஆகியவற்றின் ஆதரவோடு, உணவு பதப்படுத்துதல், பேக்கரி, பேக்கேஜிங் மற்றும் விருந்தோம்பல் துறைகளின் நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதே இக்கண்காட்சியின் முக்கிய நோக்கமாகும்.
6 கண்காட்சி அரங்குகளில் 300-க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் பங்கேற்கும் இந்த நிகழ்வில், ‘பேக்கர்ஸ் டெக்னாலஜி ஃபேர்’, ‘இந்தியா ஹோரெகா எக்ஸ்போ’, ‘உணவு மற்றும் பான பதப்படுத்துதல் கண்காட்சி’, ‘இந்தியா உணவு பேக்கேஜிங் கண்காட்சி’ மற்றும் ‘உணவு தொழில்துறை மாநாடு’ உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.
இதில் செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த ஸ்மார்ட் உற்பத்தி, ரோபோடிக்ஸ், டிஜிட்டல் தொழிற்சாலை தீர்வுகள், ஸ்மார்ட் குளிர்சங்கிலி தொழில்நுட்பம், சூழலுக்கு உகந்த பேக்கேஜிங் மற்றும் கார்பன் உமிழ்வைக் குறைக்கும் நவீன தீர்வுகள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. அத்துடன், 3,000-க்கும் மேற்பட்ட வணிக சந்திப்புகள், தொழில்நுட்ப கருத்தரங்குகள்,
நேரடி செயல்விளக்கங்கள் மற்றும் பயிற்சி வகுப்புகளும் நடைபெறுகின்றன.
18 வயதுக்கு மேற்பட்ட தொழில்துறை பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் இக்கண்காட்சியில், மாணவர்களுக்கு ஜூலை 3-ஆம் தேதி பிற்பகல் 1 மணிக்குப் பிறகு அனுமதி உண்டு. இந்தத் தகவல்களைச் செய்தியாளர்கள் சந்திப்பில் பகிர்ந்துகொண்ட சினர்ஜி எக்ஸ்போஷர்ஸ் இயக்குநர் திரு. பிரிஜேஷ் எட்வர்ட்ஸ் அவர்களுடன், அக்கார்ட் ஹைலேண்ட் ஹோட்டல் இயக்குநர் திரு. அருண் அண்ணாதுரை, டிஏபிபி ஸ்நாக்ஸ் நிறுவனர் திரு. பிரபு காந்திகுமார், ஸ்கால் இன்டர்நேஷனல் தலைவர் திரு. ரமேஷ் சந்திரன், ஜே.எம். பேக்கர்ஸ் அகாடமி இயக்குநர் திரு. ஜே.எம். லாரன்ஸ், தமிழ்நாடு கேட்டரர்ஸ் அசோசியேஷன் தலைவர் திரு. ரஞ்சித், பேக்கர்ஸ் ஸ்பைசஸ் தலைவர் திரு. முகேஷ் விஜ் மற்றும் சுவிகார் என்டர்பிரைசஸ் திரு. விஷால் விஜ் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.