எஸ் செல்வகுமார் சீர்காழி
சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தலைமை தபால் நிலையம் முன்பு ஐக்கிய விவசாய முன்னணி மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசம் தழுவிய மறியல் போராட்டம் நடைபெற்றது.
தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், தொழிலாளர் விரோத 4 சட்டத் தொகுப்புகளை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், விவசாய விளைபொருட்களுக்கு C2 + 50 சதவீதம் அடிப்படையில் கட்டுப்படியான விலை வழங்க வேண்டும், விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் விபிஜி ராம் ஜி திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
மேலும், மின்சாரத் துறையை தனியார்மயமாக்குவதைக் கைவிட வேண்டும், அங்கன்வாடி திட்டப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.42,000 ஆக உயர்த்த வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை கைவிட வேண்டும், விவசாயிகள் பெற்ற கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன.
இதையடுத்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோரை சீர்காழி போலீசார் கைது செய்தனர்.