நாகப்பட்டினம்,ஜூன்.29-
திருமருகல் ஒன்றியத்தில் குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டம் நடப்பாண்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற, விவசாயிகள் உழவன் செயலியில் முன்பதிவு செய்யலாம் என வேளாண்மை உதவி இயக்குநர் புஷ்கலா தெரிவித்துள்ளார். திருமருகல் வட்டாரத்தில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்படாமல் இருப்பதால் பம்புசெட் மூலம் மட்டுமே குறைவான பரப்பளவில் குறுவை சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர். அவ்வாறு குறுவை சாகுபடியை செய்யும் விவசாயிகளை ஊக்கப்படுத்துவதற்காக குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டம் அமல்படுத்தப்பட்டு அவர்களுக்கு உயிர் உரங்கள், ரசாயன உரங்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வந்தது.
குறுவை சாகுபடி செய்துள்ள அனைத்து விவசாயிகளும் இந்த திட்டத்தில் பயன்பெற வேண்டும் என்பதால், ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கருக்கு மட்டுமே இந்த திட்டம் பொருந்தும் என அறிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, கடந்தாண்டு இந்த திட்டத்தில் சிறு மாற்றம் செய்யப்பட்டு, ரசாயன உரங்களுக்கு பதிலாக வரிசை நடவு எனப்படும் இயந்திர நடவை ஊக்கப்படுத்தும் வகையில், இயந்திர நடவு பின்னேற்பு மானியம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நிகழாண்டும் குறுவை சிறப்பு தொகுப்புத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கருக்கு வழங்கப்படும். மேலும், உயிர் உரங்கள், நுண்ணுட்ட சத்துக்கள் மற்றும் விதைகள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளன. இயந்திர நடவு செய்துள்ள விவசாயிகள் உழவன் செயலியில் இதற்கான முன்பதிவை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளும் பயன்பெற வேண்டும் என்பதற்காக ஒரு விவசாயிக்கு அதிகபட்சம் 1 ஏக்கர் என முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கிராம நிர்வாக அலுவலர்களிடம் அதற்கான அடங்கல் சான்று, வங்கி கணக்கு அட்டை, ஆதார் அட்டை கொண்டு பதிவு செய்தால் குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டத்தில் அதற்கான மானியங்கள் வழங்கப்படும் என்றார்.