எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே திருமுல்லைவாசலில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் பிறந்தநாள் விழா கொள்ளிட கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜய் ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்த விழாவில், மாவட்டச் செயலாளர் கோபிநாத் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு சிறப்புறை ஆற்றினார்.நிகழ்சியில் நடப்பாண்டு 10,12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு நினைவு பரிசு கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
தொடர்ந்து, இந்நிகழ்வின் அதிமுக,திமுக,நாதக உள்ளிட்ட பல்வேறு மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர், மாவட்டச் செயலாளர் கோபிநாத் முன்னிலையில் தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு கட்சி துண்டை அணிவித்து, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் விழாவில் பேசிய மாவட்டச் செயலாளர் கோபிநாத், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். கடந்த 60 ஆண்டுகளாக மாநிலத்தை ஆண்டவர்கள், மக்கள் நலனைப் புறக்கணித்துவிட்டுத் தங்கள் குடும்ப நலனில் மட்டுமே அக்கறை காட்டி வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.
தற்போது நடைபெறும் இந்தக் கூட்டம் ஊழலால் உருவானதல்ல, மக்களின் உண்மையான உணர்வால் உருவானது எனத் தெரிவித்த கோபிநாத், வரவிருக்கும் காலங்களில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு சிறப்பான ஆட்சியைத் தொடர மக்கள் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் எனத் தனது உரையில் வலியுறுத்தினார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாணவரணி செயலாளர் கார்த்திக்,மாவட்ட துணை செயலாளர்,சீர்காழி கொள்ளிடம் ஒன்றிய செயலாளர்கள், ஒன்றிய துணை செயலாளர் பிரேம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.