மதுரை, ஆக. 9:
மதுரை மணியம்மை மழலையர் பள்ளியில், தமிழ் மதுரை அறக்கட்டளை மற்றும் தமிழ் மதுரை சங்கப்பலகை சார்பில், கடமை வீரர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்புக் கவியரங்க நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் சமூகவியல் பேராசிரியரும், முனைவரும், கவிஞரும், எழுத்தாளருமான முனைவர் சா. சே. ராஜா அவர்களின் தமிழ் இலக்கியம் மற்றும் சமூகப் பணிகளைப் பாராட்டி ‘காமராஜர் கவிச்சுடர் விருது – 2026’ வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
தமிழக அரசின் ‘தூய தமிழ் பற்றாளர் விருது’ பெற்ற கவிச்சிங்கம் சித்தார்த்பாண்டியன் மற்றும் மருத்துவக் கவிஞர் நாகநாதன் ஆகியோர் தங்களது கரங்களால் முனைவர் சா. சே. ராஜாவுக்கு இவ்விருதை வழங்கினர்.
காமராஜரின் சமூகநீதி, கல்வி வளர்ச்சி, எளிமை, நேர்மை மற்றும் மக்கள் நலச் சிந்தனைகளைப் போற்றும் வகையில் நடைபெற்ற இச்சிறப்புக் கவியரங்க நிகழ்வில், தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தின் வளர்ச்சிக்கு பங்காற்றி வரும் கவிஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் காமராஜரின் கொள்கைகள் மற்றும் சமூகப் பணிகள் குறித்த கவிதைகள், உரைகள் இடம்பெற்றதுடன், தமிழின் பெருமையையும் இலக்கியத்தின் சிறப்பையும் எடுத்துரைக்கும் பல்வேறு நிகழ்வுகளும் நடைபெற்றன.