புதுவை-தமிழக எல்லை பகுதி அடர்ந்த பசுமையான காடுகளையும் முந்திரி தோப்புகளையும் கொண்ட பகுதியாகும். புதுவையில் குற்ற சம்பவங்களை செய்துவிட்டு இங்குள்ள பகுதிகளில் குற்றவாளிகள் தஞ்சம் அடைந்து வருவது வழக்கமாகியுள்ளது. கோட்டகுப்பம் ஆரோவில் பகுதிகளில் கஞ்சா புழக்கம் அதிகரித்து வரும் நிலையில் இதுபோன்ற அடர்ந்த காட்டுப்பகுதிகளில் கஞ்சா புழக்கம் இருந்து வருகிறது. கோட்டகுப்பம் உள்ளிட்ட பகுதிகளிலும் திருட்டு வழிபறி சம்பவங்களில் ஈடுபட்டு இது போன்ற பகுதிகளில் குற்றவாளிகள் தலைமறைவாகி விடுகின்றனர். மேலும் போலீசார் கண்ணில் படாமல் இருக்க காட்டுப்பகுதிகளில் மது அருந்தும் ரவுடி கும்பல்களுக்கு இடையே அவ்வப்போது ஏற்படும் மோதல் காரணமாக கொலை சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் இவர்களை பிடிப்பது போலீசாருக்கு சவாலாக இருந்து வரும் நிலையில் பிரத்தியேக ட்ரோன் கேமரா மூலம் தினமும் இந்த பகுதிகளை கண்காணிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். அதன்படி சின்ன கோட்டகுப்பம் பிரின்ஸ்பர்க் ரோட்டில் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையில் போலீசார் ட்ரோன்களை இயக்கி பார்த்தபோது அங்கு ஒரு கும்பல் மது அருந்தி கொண்டிருந்தது.

ட்ரோன் கேமராவில் இருந்து செல்போனுக்கு நேரடியாக வந்த காட்சிகளை வைத்து அங்கு சென்ற போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். மது அருந்தியவர்களுக்கு போலீசார் அறிவுரை கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். ட்ரோன் கேமரா மூலம் தேவைப்படும் பொழுது அடர்ந்த காட்டு பகுதியில் எப்போது வேண்டுமானாலும் போலீசார் கண்காணிக்கலாம். இதன் மூலம் ரவுடிகள் நடமாட்டம், ரவுடிகள் தஞ்சம் அடைவது, சூதாட்டம் நடக்கும் இடம், கஞ்சா பயன்படுத்தும் நபர்களை கண்டறிய முடியும். மேலும் முன்கூட்டியே குற்றவாளிகளை கைது செய்யவும் இது உதவியாக இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *