M.கார்த்திக்ராஜா நாமக்கல் செய்தியாளர்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் காவிரி ஆற்றங்கரையில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் மாதம் மும்மாரி மழை பெய்யும், விவசாயம் செழிக்கவும், மக்களும் வளம்பெற வேண்டி மோட்ச தீபம் காவிரியில் விடப்பட்டது.
இதனை பல்லாயிரக்கணக்கானோர் கண்டு தரிசனம் செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் காவிரிக் கரையில் உள்ள பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. இக்கோவிலில் இருந்து ஆண்டு தொரும் ஆடி 18, ஆடிப்பெருக்கு நாள் அன்று, காவிரி ஆற்றில் மோட்சா தீபம் விடுவது வழக்கம். ஆடிப்பெருக்கு விழா காவிரி ஆற்றில் மாலை 6 மணிக்கு மேல் விவசாயம் செழிக்கவும், காவிரி தாய்க்கு நன்றி செலுத்தும் வகையிலும் நாடு வளம் பெறவும், மக்கள் நலம் பெறவும் வேண்டி மாதம் மும்மாரி மழை பெய்யவும் காவிரி ஆற்றில் மோட்ச தீபம் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக காசி விஸ்வநாதர் கோயிலில் வாழை மரத்தால் செய்யப்பட்ட மோட்ச தீபத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பின்னர் தீப ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் கோவிலில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு பரிசல் மூலம் காவிரி ஆற்றின் மத்திய பகுதிக்கு சென்று மோட்ச தீபம் விடப்பட்டது. மோட்ச தீபத்தை காண தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இரட்டை காவிரி பாலம் மற்றும் காசி விஸ்வநாதர் காவிரி கரையில் இருந்து நாமக்கல் , கரூர், மற்றும் ஈரோடு மாவட்ட பகுதிகளில் வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மோட்ச தீபத்தை கண்டு வழிபட்டனர். பாதுகாப்பு கருதி பரமத்தி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜமுரளி தலைமையில், வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி மற்றும் 100- க்கும் மேற்பட்டபோலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.