எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி அருகே மேல நாங்கூர் கிராமத்தில் குடிநீர் காவி நிறமாக வருவதால் கிராம மக்கள் அவதி கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் தண்ணீர் வழங்க கோரிக்கை.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த மேல நாங்கூர் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இம்மக்களின் அன்றாட குடிநீர் தேவைக்காக அப்பகுதியிலேயே மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைத்து தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இப்பகுதியில் உள்ள நிலத்தடி நீர் முழுவதுமாக காவி நிறமாக மாறியதால் குடிநீரும் காவி நிறமாக மாறியது.
இந்த தண்ணீரையே மக்கள் குடிக்க,குளிக்கவும்,அத்தியாவசிய தேவைகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த தண்ணீரை பிடித்து வைக்கும் பாத்திரங்கள் காவி நிறமாகவும், இதில் சமைக்கப்படும் உணவுகள் கூட காவிநிறத்தில் இருப்பதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்த தண்ணீரை பயன்படுத்தி துவைக்கப்படும் பள்ளி மாணவர்களின் சீருடைகள் உட்பட துணிகள் கூட காவிநிறத்தில் மாறி விடுவதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர். கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாய் அமைக்கப்பட்டும் இதுவரை பயன்பாட்டிற்கு வரவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே தங்களுக்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.