அரியாங்குப்பம் மார்க்கெட்டில் மீன் அங்காடி என தனியாக இருந்து வரும் நிலையில் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மாதா கோவில் வீதியில் அனுமதி இல்லாமல் போக்குவரத்துக்கு இடையூறாகவும் அப்பகுதி மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படும் வகையில் சாலை ஓரத்தில் மீன் கடைகள் வைத்து பலர் வியாபாரம் செய்து வந்தனர். இதனால் அங்காடியில் மீன் வியாபாரம் பாதிக்கப்படுகிறது எனவும் தொடர்ந்து கொம்யூன் பஞ்சாயத்துக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. மேலும் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும் புகார்கள் வந்தன..
அதனைத் தொடர்ந்து நேற்ற அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள் பாலமுருகன், புனிதவதி, பில்கலெக்டர் செழியன் மற்றும் கள ஊழியர்கள் மாதா கோவில் வீதிக்கு சென்று போலீசார் உதவியுடன் அப்பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட மீன் கடைகளை அதிரடியாக அகற்றினர்.
மேலும் மார்க்கெட்டில் நடைபாதையில் இருந்த கடைகளையும் அகற்றினர். தொடர்ந்து தடையை மீறி மீன்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
அசம்பாவித சம்பவம் நடக்காமல் தடுக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.