கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் – உறுப்பினர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ
சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ பேசியதாவது:-
மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளில் செய்யாததை திராவிட மாடல் அரசு 2½ ஆண்டுகளில் செய்து முடித்துள்ளது. அதை சகிக்க முடியாதவர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்கிறார்கள். குடியுரிமை திருத்த சட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று அரசு அறிவித்துள்ளதை வரவேற்கிறோம்.
குடியுரிமை திருத்த சட்டம் வர யார் காரணம்?.பா.ஜனதா முதலில் மக்களவையில் இந்த சட்டத்தை நிறைவேற்றியது. அங்கு அவர்களுக்கு பெரும்பான்மை இருந்தது. ஆனால்,மாநிலங்களவையில் பா.ஜனதாவுக்கு பெரும்பான்மை இல்லாதபோதும், அ.தி.மு.க. உறுப்பினர்கள் 11 பேர் ஆதரித்த தால் அங்கும் சட்டத்தை நிறைவேற்றியது.தி.மு.க.வும், அதன் கூட்டணி கட்சிகளும்தான் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தன.
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கிறிஸ்தவ மதத்துக்கு செல்லும்போது, அவர்கள் பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்க்கப்படுகிறார்கள். ஆனால், இஸ்லாமியர்களாக மாறுபவர்கள் பிறர் என்ற பட்டியலிலேயே சேர்க்கப்படுகி றார்கள். அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
மாணவர்கள் மத்தியில் போதைப்பழக்கம் அதிகரித்து வருகிறது. எனவே, போதைப்பொருளை நிரந்தரமாக தடுக்க சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும். கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.
இதனையடுத்து தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜவாஹிருல்லா அம்மாபேட்டை ஒன்றியம் தேவராயன்பேட்டை கிராமத்தில் சுமார் 2500 க்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர்.
இவர்களில் சுமார் 100 க்கும் மேற்பட்டோர் கல்வி கற்பதற்காக கும்பகோணம்,தஞ்சாவூர் சென்று வருகின்றனர். எனவே, இந்த மாணவர்கள் மற்றும் கிராமவாசிகள் பயன்பெறும் வகையில், இந்த கிராமத்தை மையமாக வைத்து கும்பகோணம்- மெலட்டூர்- அய்யம்பேட்டை மார்க்கத்தில் அரசுப் பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும். ஏற்கனவே இந்த ஊரில் அரசுப் பேருந்து போக்குவரத்து இருந்துள்ளது என்று குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்துப் பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் உரிய ஆய்வுகள் மேற்கொண்டு இந்த கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.