தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறை சார்பில் ஐந்து மண்டலங்களில் இலக்கியத் திருவிழா மற்றும் இளைஞர் இலக்கியத் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.
அடுத்த வாரம் கோவையில் நடைபெற உள்ள சிறுவாணி இலக்கியத் திருவிழாவை முன்னிட்டு, தருமபுரி நல்லானூர் ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இலக்கியப் போட்டிகள் நடைபெற்றன. இரண்டு நிமிட பேச்சாற்றல், நூல் அறிமுகம், விவாத மேடை, இலக்கிய வினாடி வினா, ஆறு நிமிட பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி, தொன்மை தொடர்ச்சி, ஆங்கில நூல் திறனாய்வு, செயற்கை நுண்ணறிவு பயன்படுத்துதல் முதலான போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா பள்ளப்பட்டி மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரி கருத்தரங்கு கூடத்தில் நடைபெற்றது.
விழாவுக்கு மாவட்ட நூலக அலுவலர் அர.கோகிலவாணி தலைமை வகித்தார். நூலகர் சி.சரவணன் அறிமுக உரை ஆற்றினார்.
மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் நா.மகேந்திரன், ஜெயம் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் சி.பரஞ்சோதி, மாவட்ட நூலக ஆய்வாளர் டி.மாதேஸ்வரி, மாவட்ட மைய நூலகர் இரா.மாதேஸ்வரன், கண்காணிப்பாளர் த.மணேகரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
தகடூர் புத்தகப் பேரவைத் தலைவர் இரா.சிசுபாலன், தருமபுரி மாவட்டத் தமிழ்க்கவிஞர் மன்றத்தின் தலைவர் பாவலர் கோ.மலர்வண்ணன், ஆசிரியர் ப.இளங்கோ, தருமபுரி மாவட்ட படைப்பாளர் பதிப்பாளர் சங்கச் செயலாளர் மா.பழனி வாழ்த்துரை வழங்கினர். போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு மருதம் நெல்லி கல்விக் குழுமத் கோவிந்த் ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினார்.
முன்னதாக நூலகர் தீ.சண்முகம் வரவேற்றார். முடிவில் ஜெயம் கல்லூரி நூலகர் சி.ஆறுமுகம் நன்றி கூறினார். ஜெயம் கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் நா.நாகராஜ் விழாவை ஒருங்கிணைத்தார். விழாவில் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் என என் திரளாக கலந்து கொண்டனர்.