வலங்கைமான் பெரிய பள்ளிவாசல் பகுதியில் நாடாளுமன்ற தேர்தலில் 100% வாக்குப்பதிவு உறுதிப்படுத்தும் விதமாக, வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நன்னிலம் சட்டமன்றத் தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கண்மணி மற்றும் வருவாய்த் துறையினர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
இந்தியாவின் 18-வது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடக்கும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. முதல் கட்டமாக தமிழகத்துக்கு, ஏப்ரல் 19 இல் ஓட்டுப்பதிவு நடக்கிறது. நாடாளுமன்றத்துக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் 100% வாக்குப்பதிவு உறுதிப்படுத்தும் விதமாக திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ உத்தரவின் பேரில், வாக்காளர் விழிப்புணர்வு பேரணி, வாக்காளர் கையெழுத்து இயக்கம், விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்குவது, ரங்கோலி கோலம் இடுவது, விழிப்புணர்வு பேரணி நடத்துவது என பல்வேறு முன்னெடுப்பு பணிகளை தேர்தல் ஆணையம் செயல்படுத்தி வருகிறது.
அதன் ஒரு கட்டமாக 29- நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதி 169- நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வலங்கைமான் பெரிய பள்ளிவாசலில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை நன்னிலம் சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கண்மணி வழங்கினார்.
நிகழ்ச்சியில், தாசில்தார் ரஷ்யா பேகம், மண்டல துணை வட்டாட்சியர் ஆனந்த், வருவாய் ஆய்வாளர் விக்னேஸ்வரன் மற்றும் வருவாய்த் துறையினர் பலரும் உடன்இருந்தனர்.