தென்காசி, ஜுன் – 09
தென்காசி மாவட்டம், மேலநீலித நல்லூர் ஊராட்சி ஒன்றியம், நடுவக்குறிச்சி மைனர் ஊராட்சியில் நாய்களுக்கு தடுப்பூசி முகாம் மற்றும் நாய்களுக்கு லைசென்ஸ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் மேலநீலிதநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட நடுவக்குறிச்சி மைனர் ஊராட்சி மன்றத் தலைவராக
அதிமுக திருநெல்வேலி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் முனைவர் எஸ்.சிவஆனந்த் செயல்பட்டு வருகிறார்.
நடுவக்குறிச்சி மைனர் ஊராட்சி பகுதியில் வெறிநாய் கடியிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க நடுவக்குறிச்சி மைனர் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.சிவஆனந்த் நடவடிக்கை மேற்கொண்டார்.
அதன்படி வெறிநாய்கள் கடித்து பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில் வீட்டு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி போடவும், தடுப்பூசி போட்ட நாய்களின் உரிமையாளர்களுக்கு மட்டும் லைசென்ஸ் வழங்கவும், தடுப்பூசி போடப்படாத நாய்கள் ஆபத்தை விளைவிக்கும் தெருநாய்களாக கணக்கிடப்பட்டு நகராட்சி மூலம் பிடித்துச் செல்லப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
அதன்படி நடுவக்குறிச்சி மைனர் ஊராட்சிக்கு உட்பட்ட வல்லராமபுரத்தில் முதல்கட்டமாக அத்திட்டத்தை கடந்த வாரம் செயல்படுத்தியதில் 82 நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு லைசென்ஸ் வழங்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டது…
இரண்டாம் கட்டமாக புதுக்கிராமத்தில் இன்று 31 நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு லைசென்ஸ் வழங்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு நடுவக்குறிச்சி மைனர் ஊராட்சி மன்ற தலைவரும் திருநெல்வேலி மண்டல அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளருமான முனைவர் எஸ்.சிவஆனந்த் தலைமை தாங்கி தடுப்பூசி முகாமினை துவக்கி வைத்தார்.
நடுவக்குறிச்சி கால்நடை மருத்துவர் நாகராஜன் தலைமையிலான மருத்துவ குழு தடுப்பூசிகளை போட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் நடுவக்குறிச்சி மைனர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் முத்துப்பாண்டி, ஊராட்சியின் வார்டு உறுப்பினர்கள் சாமித்தாய் விஜயமணி , ஊராட்சி செயலர் மாரித்துரை , பணித்தள பொறுப்பாளர்கள் செல்வி.முத்து
லட்சுமி , பட்டுராஜா உட்பட பலர் உடன் கலந்துகொண்டனர்.