திருவாரூர் மாவட்டம் குடவாசல் கிளை நூலகம் 30 ஆண்டுகளுக்கு மேலாக முழு நேர நூலகமாக இயங்கி வருகிறது.இந்த நூலகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புலவராகவும்,6 ஆயிரத்து மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாவும் உள்ளனர்.

இங்கு தினமும் ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் இந்த நூலகத்தில் போதுமான இடவசதி இல்லை. இதனால் வாசகர்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

நூலக கட்டிடம் 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.தற்போது இந்த கட்டிடம் சேதமடைந்து சுவர்களில் ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டு கட்டிடம் பயன்பாடின்றி மூடப்பட்டுள்ளது.

அருகில் இருக்கும் மற்றொரு கட்டிடத்தில் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதால் அக்கட்டிடத்தில் போதுமான இட வசதி இல்லாமல் உள்ளது. நூலகத்தில் வாசகர்கள் அமர்ந்து படிக்க போதிய இட வசதி இல்லை.

இந்நிலையில் நூலகத்தில் இயங்கி வந்த இணையதள இணைப்புக்கு துறையின் அதிகாரிகள் முறையாக இணையதள கட்டணம் செலுத்தாததால் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட அரசு பணி தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

மேலும் நூலகத்திற்கு சாலை வசதி இல்லாததால் குறுகலான பகுதியில் வாகனங்களை திருப்ப முடியாமல் அவதிப்படுகின்றனர்.

மழை நேரங்களில் சாலை சேறும், சகதியுமாக இருப்பதால் நூலகத்திற்கு வாசகர்கள் வந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.

நூலகம் வாய்க்கால் ஓர புதர் செடிகள் பகுதியில் அமைந்துள்ளதால் அடிக்கடி பாம்புகள் மற்றும் கொசு தொல்லைகளும் அதிகரித்துள்ளது.

எனவே அடிப்படை வசதி இல்லாத நூலகத்தை ஓகை திருவாரூர் சாலையில் உள்ள வட்டார வள மையம் மற்றும் வட்டார கல்வி அலுவலகம் அமைந்துள்ள பகுதிக்கு இடமாற்றம் செய்து, அங்கு அதிநவீன வசதிகளுடன் கூடிய பெரிய அளவிலான நூலக கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திற்கு குடவாசல் பகுதி பொதுமக்களும், வாசகர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *