கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இந்திய நிறுவனத்திற்கு, வீடு, நிலம் கொடுத்தவர் மூலகுப்பம் கிராமத்தை சேர்ந்த குழந்தைவேல். இவர் தற்போது வடலூரில் பகுதியில் வசித்து வரும் நிலையில், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு நில எடுப்பு துறை மூலமாக, என்எல்சி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு ஷிப்ட்யில், சுரங்கம் 1A – வில் உள்ள Top bench -யில், மண் வெட்டும் இயந்திரத்திற்கு சிக்னல் கொடுத்துக் கொண்டிருந்து உள்ளார். அப்போது அடையாளம் தெரியாத கனரக வாகனம் ஒன்று, தொழிலாளி குழந்தைவேலின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், நேற்று இரவு முழுவதும் அவரது உடலை யாரும் பார்க்காததால், இன்று காலை 6 மணி ஷிப்ட்க்கு சென்ற தொழிலாளர்கள், குழந்தைவேல் உடல் நசுங்கி உயிரிழந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தொழிலாளர்கள் என்எல்சி அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததின் பேரில், விரைந்து வந்த அதிகாரிகள் உயிரிழந்த தொழிலாளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக என்எல்சி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் உயிரிழந்த தொழிலாளி குழந்தைவேல், தனது குழந்தைகளுக்கு அடுத்த வாரம் காதணி விழா வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக நெய்வேலி என்எல்சி இந்திய நிறுவனத்தில் உள்ள சுரங்கத்தில், பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பு இல்லை எனவும், தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமெனவும், உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்தினருக்கு நிவாரணமும், அவரது குடும்பத்தினர் ஒருவருக்கு நிரந்தர வேலை வேண்டுமென தொழிலாளர்கள் கோரிக்கை வைக்கின்றனர். இதேபோல் கடந்த மாதம் எட்டாம் தேதி இரண்டாவது சுரங்கத்தில், கன்வேயர் பில்ட்டில் சிக்கி அன்பழகன் என்பவர் உயிரிழந்த நிலையில், மீண்டும் ஒரு சம்பவமாக சுரங்கத்திற்குள் தொழிலாளி குழந்தைவேல் உயிரிழந்த சம்பவம், தொழிலாளர்கள் மத்தியில் கடும் அச்சத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.