திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் வலங்கைமான்- நீடாமங்கலம் சாலையில், அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் வாரந்தோறும் புதன்கிழமை நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த வாரம் ஒழுங்குமுறை விற்பனை கூட செயலாளர் மல்லிகா உத்தரவின் பேரில் பருத்தி மறைமுக ஏலம் நடைபெற்றது.பருத்தி ஏலத்தில் 200 க்கும் மேற்பட்ட விவசாயிகள் பருத்தியினை கொண்டு வந்திருந்தனர்.சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 4 வியாபாரிகள் கலந்து கொண்டனர். பருத்தி அதிகபட்ச விலையாக குவிண்டால் 8,499 ரூபாய்க்கும், குறைந்தபட்ச விலையாக ரூபாய் 7,767 க்கும்,சராசரி விலையாக குவிண்டால் ரூபாய் 8,120 க்கும் ஏலம் போனது. நடைபெற்ற பருத்தி மறைமுக ஏலத்தில் 187.53 குவிண்டால் பருத்தி ரூபாய் 15 லட்சத்து 28 ஆயிரத்து 511 க்கு ஏலம் போனது.