திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக செல்போன் டவர்களில் விலை உயர்ந்த பொருளான ரேடியோ ரிமோட் யூனிட் திருடப்படுவதாக வட பாதிமங்கலம், திருவாரூர் தாலுகா, நீடாமங்கலம், பேரளம்,நன்னிலம், குடவாசல், வலங்கைமான், ஆலிவலம் மற்றும் கோட்டூர் காவல் நிலையங்களில் புகார்கள் வந்தன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆலோசனைப்படி திருவாரூர் உட்கோட்ட உளை காவல் கண்காணிப்பாளர் மணிகண்டன், நன்னிலம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தமிழ்மாறன், வலங்கைமான் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்தது. இந்நிலையில் குடவாசல் தாலுக்கா வேடம்பூரை சேர்ந்த சுவாமிநாதன் மகன் கணேஷ் மற்றும் அவரது சகோதரர் யோகேஷ் ஆகியோருடன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. கணேஷ் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தனியார் செல்போன் நிறுவனத்தில் தினேஷ் என்பவருடன் டெக்னிசனாக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தற்போது கோயம்புத்தூர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். இவர் மேலும் பணம் தேவைப்படும் போது தினேஷ் உதவியுடன் திருவாரூரை சுற்றியுள்ள செல்போன் டவர்களில் ரேடியோ ரிமோட் யூனிட்டை திருடி விற்பனை செய்து உள்ளதாக, அதில் கிடைக்கும் பணத்தை இருவரும் பகிர்ந்து கொண்டனர். இதேபோல் நன்னிலம் உட்கோட்ட தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி திருவாரூர் உட்கோட்டம், கீழப் படுகை மில் தெருவை சேர்ந்த செல்லதுரை மகன் வீரமணி தனது நண்பர்களான திருவாரூர் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த கேசவமூர்த்தி (30),திருவாரூர் ராகவேந்திரா நகரை சேர்ந்த நரேந்திரன் (34), பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சாமிநாதன் மகன் ஹரி பிரசாத் (30),புலிவலம் பகுதியை சேர்ந்த ஹாஜா நவாஸ் ஆகியோரும் கடந்த காலங்களில் செல்போன் நிறுவனங்களில் வேலை பார்த்து வந்துள்ளனர். மேலும் செல்போன் டவர்களில் விலை உயர்ந்த பொருளான ரேடியோ ரிமோட் யூனிட்டை பணத்தேவை ஏற்படும் போது எல்லாம் திருடி தங்களுக்கு தெரிந்த ஹாஜா நவாஸ் என்பவர் மூலம் உத்திரபிரதேசத்தை தேர்ந்த சாஜில் மாலிக் என்பவரிடம் விற்பனை செய்து பணம் பெற்றதாக கூறினார். மேலும் அனைவரும் ஒன்றாக சேர்ந்து வலங்கைமான், பேரளம், குடவாசல், நன்னிலம், திருவாரூர் தாலுகா, வடபாதிமங்கலம், ஆலிவலம், நீடாமங்கலம் மற்றும் கோட்டூர், நாச்சியார் கோவில் ஆகிய பகுதிகளில் உள்ள செல்போன் டவர்களில் இதே போல் திருடி விற்பனை செய்ததாக விசாரணையில் கூறினர். அவர்களிடமிருந்து திருடு போன ரேடியோ ரிமோட்டு யூனிட்டை கைப்பற்றப்பட்டதுடன் அவர்கள் திருட்டு சம்பவத்திற்கு பயன்படுத்திய மூன்று இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக வடபாதிமங்கலம் காவல் நிலையத்தில் மூன்று பேர் மீதும், வலங்கைமான் காவல் நிலையத்தில் ஆறு பேர் மீதும் புகார் செய்யப்பட்டது. மேலும் அவர்களிடம் மேற்கண்ட திருட்டு சம்பவங்களுக்கு வேறு யாரேனும் உடந்தையாக உள்ளனரா? என்றும் திருவாரூர் மாவட்டம் மட்டுமல்லாது மற்ற மாவட்டங்களிலும் இது போன்ற திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளனரா? என்ற கோணத்திலும் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *