கோவை
உருது மொழியை தாய்மொழியாக கொண்ட தக்னி முஸ்லீம்களை டவுன் காஜியாக நியமிக்க வேண்டும் – மாவட்ட ஆட்சியரிடம் இஸ்லாமியர்கள் மனு…
மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மாவட்ட அரசு டவுன் காஜி நியமிக்கப்படுவர். அந்த வகையில் கோவை மாவட்ட டவுன் காஜி நியமனம் தொடர்பாக உயர்நீதிமன்றத் தீர்ப்பை மீறி அண்மையில் நடைபெற்ற நியமனக்குழு ஆலோசனைக்கு தக்னி முஸ்லிம் சமூகத்தினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
மாமன்னர் ஹைதர் அலி காலத்தில் இருந்தே உருது மொழியை தாய்மொழியாகக் கொண்ட தக்னி முஸ்லீம்கள் டவுன் காஜி பதவியில் இருக்கின்றனர்.பாரம்பரிய உரிமையை பறிக்கும் வகையில் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டதாக கோவை மாவட்ட ஆட்சியரிடம் கோவை மாவட்டத்தில் உள்ள தக்னி ஜமாத் நிர்வாகிகள், மொஹல்லாஹ் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் ஒன்று கூடி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.
கல்வித் தகுதி மற்றும் அனுபவம் இரண்டும் பெற்ற ஒருவரை நியமிப்பதற்கு பதிலாக, அரசியல் மற்றும் அமைப்புகளின் பரிந்துரையின் அடிப்படையில் டவுன் காஜியாக நியமனம் செய்வது வேதனையாக இருப்பதாகவும் தக்னி முஸ்லிம் சமூகத்தினரின் உரிமைகளுக்கு மாற்றாக டவுன் காஜி நியமிக்கப்படும் பட்சத்தில் ஒட்டுமொத்தமாக வரும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளனர்.
அதேபோல உரிமைகளுக்கு மாற்றாக டவுன் காஜி நியமிக்கப்பட்டால் இல்லம் தோறும் கருப்புக்கொடி கட்டி தொடர் போராட்டம்,ஆர்ப்பாட்டம், பேரணி, உண்ணாவிரதம் உள்ளிட்ட அறவழி போராட்டங்களை கோவை மாவட்டம் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் நடத்த உள்ளதாக தக்னி சுன்னத் ஜமாத் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மனுவின் போது,கோவை மாவட்ட அனைத்து தக்னி ஜமாத் கூட்டமைப்பு சார்பாக நாகமொஹல்லாஹ் தக்னி அஹ்லே சுன்னத் ஜமாத் தலைவர் ஜனாப்.அப்துல் நயீம் மற்றும ஹைதர் அலி திப்புசுல்தான் தக்னி சுன்னத் ஜமாத் முன்னாள் தலைவர்.ஜனாப்.அஹமத் பாஷா மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.