பாக்குவெட்டி
திருச்சி பிருந்தாவன் வித்யாலயா ஐசிஎஸ்இ பள்ளி சார்பில் “காலத்தின் எதிரொலிகள்” நிகழ்ச்சி புத்தகங்கள் இல்லாத தின நிகழ்வில் நடைபெற்றது.
நாணயங்கள் கூறும் வரலாறு கண்காட்சியினை பள்ளி தாளாளர் சிவகாமி சாத்தப்பன் முதல்வர் சாத்தப்பன் சாத்தப்பன் முன்னிலையில் துவங்கி வைத்தார்.
கண்காட்சியில், திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவனத் தலைவர் யோகா ஆசிரியர் விஜயகுமார் , சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர் முகமது சுபேர், பிரிட்டிஷ் இந்திய நாணயங்கள் சேகரிப்பாளர் லட்சுமி நாராயணன், பாலிமர் பணத்தாள்கள் சேகரிப்பாளர் இளம்வழுதி உள்ளிட்டோர் நாணயங்கள் கூறும் வரலாற்றை எடுத்துரைத்தனர்.
நாணயங்கள் பணத்தாள்கள் சேகரிப்பு கலைஞர்களின் தனிப்பட்ட சேகரிப்பினை கொண்டு பள்ளி மாணவர்களிடையே குறிப்பிடத்தக்க கல்வி மதிப்பை சேர்ப்பதற்கும் கல்வி அனுபவத்தை பலப்படுத்தும் முயற்சியாக மதிப்புமிக்க நாணயங்களை காட்சிப்படுத்தி விளக்கினர்.சுடுமண் பொருட்கள் சேகரிப்பாளர் சந்திரசேகரன் பாக்கு வெட்டி குறித்து பேசுகையில்,முன்னோர்களின் அற்புதமான கண்டு பிடிப்புகளில் பாக்கு வெட்டி ஒன்றாகும். பாக்கை வெட்டுவதற்காக தயாரிக்கப்பட்ட இக்கருவி பல்வேறு வடிவங்களில் கலை நயத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.
விருந்துகளுக்குச் சென்றால் கண்டிப்பாக வெற்றிலை பாக்கு போட்டுக் கொள்ளுங்கள் என்று கூறுவார்கள். பாக்கில் உள்ள குரோமியம் உப்பு திடீரென்று வரும் மயக்கத்தையோ, இரத்தக் கொதிப்பையோ வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது.
முழுப்பாக்கை வெட்டி வெத்திலையில் வைத்து மடித்து சிறிது சுண்ணாம்பு, சீவல், புகையிலை துண்டும் சேர்த்து மெல்லும் வழக்கம் அன்று இருந்தது. பாக்கு வெட்டியின் பயன்பாடு தற்போது குறைந்து விட்டது
எனினும் கிராமப்புறங்களில் இன்றும் பயன்படுத்துகிறார்கள். அப்படிப்பட்ட பாக்கு வெட்டி ஆண், பெண் வடிவிலும், குதிரை, அன்னப்பறவை, குழந்தையை கொஞ்சம் தாய் என கலைநயத்துடன் பல்வேறு பாக்கு வெட்டிகள் பயன்பாட்டில் இருந்துள்ளது. பாக்கு வெட்டி தற்காப்பிற்கு பயன்படுத்தும் வகையிலும் வடிவமைத்துள்ளார்கள்.
அவை ஒவ்வொன்றும் பரவசத்தை கூட்டுவதாகவே அமைந்தது என்றார்.
திருவானைக்காவல் கிளை நூலக வாசகர் வட்ட தலைவர் விஸ்வேஸ்வரன்
நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்து இருந்தார்.நாணயங்கள் கூறும் வரலாறு நிகழ்ச்சி பண்டைய காலத்தின் வரலாறு, கலை ,கலாச்சாரம், பாரம்பரியம் பொருளாதாரத்தை எடுத்துரைப்பதாகவும் இருந்தது. நாணயங்கள் கூறும் வரலாறு கண்காட்சியினை பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கண்டு களித்தனர்.