கடந்த 58 ஆண்டுகளாக பி.எஸ்.ஜி. ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் ஆண்கள் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டிகள் கோவையில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு 59-வது கூடைப்பந்து போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி துவங்கி இன்று (ஆகஸ்ட் 27-ம் தேதி) வரை 5 நாட்கள் நடைபெற்றது. இப்போட்டிகள் பி.எஸ்.ஜி. இன்ஜினியரிங் கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த போட்டிகள் இந்திய கூடைப்பந்து கூட்டமைப்பின் அனுமதியுடனும், தமிழ்நாடு கூடைப்பந்துகழக குறியீட்டு எண்ணுடனும் நடைபெற்றது.
இதில் இந்திய அளவில் புகழ்பெற்ற 8 ஆண்கள் அணி தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டு பகுதியாக பிரிக்கப்பட்டு முதல் மூன்று நாட்கள் சூழல் முறையிலும். பின்பு கடைசி இரண்டு நாட்கள் நாக் அவுட் முறையிலும் நடைபெற்றது.
இதில் எ – பிரிவில் சென்னை – இந்தியன் வங்கி அணி, பெங்களூரு – பேங்க் ஆஃப் பரோடா அணி, புதுதில்லி – இந்திய விமானப்படை அணி, கோவை – இராஜலட்சுமி ஹெச்எஸ்எ போன்ற அணிகளும், பி – பிரிவில் புதுதில்லி – இந்திய இராணுவ அணி;, சென்னை – இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி, லோனாவாலா – இந்திய கப்பல் படை அணி;, கேரளா – கேரளா மாநில மின்சார வாரிய அணிகள் உட்பட 8 அணிகள் கலந்து கொண்டன.
இன்று மாலை 6.00 மணிக்கு நடைபெற்ற இறுதிப் போட்டியில் சென்னை – இந்தியன் வங்கி அணியும் திருவனந்தபுரம் – கேரளா மாநில மின்சார வாரிய அணியும் விளையாடின. இதில் இந்தியன் வங்கி அணி 68 – 50 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்று கோப்பையை வென்றது.
முன்னதாக மாலை 4.30 மணிக்கு நடைபெற்ற மூன்று மற்றும் நான்காம் இடங்களுக்கான போட்டியில் சென்னை – இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணியை எதிர்த்து லோனாவாலா – இந்திய விமானப்படை அணி விளையாடியது. இதில் இந்திய விமானப்படை அணி 81 – 73 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றது.
வெற்றி பெற்ற இந்தியன் வங்கி அணிக்கு முதல் பரிசாக ரூ.1,00,000.00 மற்றும் பிஎஸ்ஜி சுழல் கோப்பையும், இரண்டாம் இடம் பெற்ற கேரளா மாநில மின்சார வாரிய அணிக்கு பரிசாக ரூ.75,000.00 மற்றும் கோப்பையும், மூன்றாம் இடம் பெற்ற இந்திய விமானப்படை அணிக்கு ரூ.50,000.00 மற்றும் கோப்பையும், நான்காம் இடம் பெற்ற இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணிக்கு 25,000.00 மற்றும் கோப்பையும், இந்தியன் வங்கி அணியின் வீரர் திரு. பாலாவுக்கு சிறந்த விளையாட்டு வீரருக்குகான விருது மற்றும் ரூ.10,000.00 பரிசாக வழங்கப்பட்டது.
இன்று நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கோவை மாவட்ட ஆட்சியாளர் திரு. பவன்குமார் ஜி கிரியப்பனவர் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுகளை வழங்கினார், பிஎஸ்ஜி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் திரு. எல். கோபாலகிருஷ்ணன் மற்றும் கோவை மாவட்ட கூடைப்பந்து கழக தலைவரும் கோவை சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருமான திரு. ஜி. செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.