திருச்சி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழாய்வுத்துறை வளனார் தமிழ் பேரவை சார்பில் நடைபெற்ற தமிழரின் தொன்மை சின்னங்கள் கண்காட்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது
கண்காட்சியினை தமிழ் துறை தலைவர் ஜோசப் சகாயராஜ் முன்னிலையில், கல்லூரி முதல்வர் அருள் முனைவர் மரிய தாஸ் தொடங்கி வைத்தார். கல்லூரி அதிபர் அருள் முனைவர் பவுல் மைக்கேல், செயலர் அருள் முனைவர் ஆரோக்கியசாமி சேவியர், துணை முதல்வர் குமார் , தேர்வு நெறியாளர் அலெக்ஸ் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்
புழங்கு பொருட்கள் சேகரிப்பாளர் விஜயகுமார் ஒத்த தட்டு தராசு குறித்து பேசுகையில்,நம்ம ஊர்களுல காலங்காலமா பழங்காலத்தில் பண்டங்கள் நிறுக்க நம்ம மக்களால பயன்படுத்தப்பட்ட தராசை ‘வெள்ளிகாவரை’ ன்னு சொல்லுவாங்க. சில இடங்களில தூக்குகோல்ன்னும் சொல்வார்கள்.‘வெள்ளைக்கோல்வரை’ங்கிற தமிழ் சொல்தான் வெள்ளிகாவரன்னு வழக்குச் சொல்லாகி விட்டது.
அந்த கோலுல வெள்ள நிறத்துல சில கோடுங்க வரஞ்சிருப்பாங்க.அதனாலதான் வெள்ளைக்கோல்வரை என்பார்கள். அதே வகையில் கோலை தூக்கி நிறுத்துவதால் தூக்கு கோல் என்றும் கூறுவர். தூக்குக் கோலில் உள்ள கோடுகள் தான் எடைகளுக்கான குறியீடு ஆகும்.
தாரசுன்ன இரண்டு தட்டு இருக்குறது வழக்கம்.ஒண்ணு எடைக்கல் வைப்பதற்கும் இன்னொன்று எடை போட வேண்டிய பொருளை வைப்பதற்கும் ஆகும். ஆனால் இந்த வெள்ளிக்காவரைங்குற தூக்குகோலுல ஒரு தட்டுதான் உண்டு. அந்த கோலுல வரஞ்சிருக்குற கோடுங்க தான் எடை அளவு.
ஒவ்வொரு கோடும் ஒரு எடை அளவுக்கானது. நகர்த்துற மாதிரி தூக்கு கோலுல ஒரு சின்ன நூல் கயிறு கட்டியிருப்பங்க.தேவையான எடைக்குண்டான கோட்டுக்கு கயித்த நகர்த்தி பிறகு அந்த கோட்டுலயே கயித்த இறுக்கி எடை போட வேண்டிய பொருள தராசுதட்டுல வச்சு கோல தூக்கி எடை போடவேண்டியது தான்.
தூக்கு கோல் படுக்கவசத்துல சமமா இருந்தா சரியான எடை காட்டுதுன்னு அர்த்தம். மேல் வசமாக கோல் தூக்குனா நிறுக்குற பொருள் நிறுக்க வேண்டிய அளவுக்கு அதிகமா தட்டுல இருக்குன்னு அர்த்தம்.கோல் கீழ் வசமாக இருந்தா குறைவா இருக்குன்னு அர்த்தம். இப்ப புழக்கத்துல இருக்குற ரெட்டத்தட்டு தராச விட இந்த ஒத்தத்தட்டு தராசுக்கு சில விஷேச தன்மைங்க உண்டு.
இதுல பண்டங்கள நிறுக்க தனியா எடைக்கல்லுன்னு ஒண்ணு தேவையில்ல. இரட்டத்தட்டுத் தராசுல ஒரு கிலோ எடைக்கு ஒரு பொருள நிறுக்கணுமுண்ண எடைக்கல் ஒரு கிலோ எடை போட வேண்டிய பொருள் ஒரு கிலோன்னு ரெண்டு கிலோ எடைய தூக்குறதுக்கான சக்திய நம்ம உடம்பு செலவழிக்கணும். ஆன ஒத்தத்தட்டு தராசுல இந்த பிரச்சனை இல்ல. இதை“சமன் செய்து சீர்தூக்கும் கோல்” என்றும் கூறுவர். சிபி சக்கரவர்த்தி புறாவின் உயிரை காப்பாற்ற தன் தொடைக்கறியை வெட்டி ஒற்றைத்தட்டுத் தராசில் நிறுத்து கழுகுக்குக் கொடுக்கும் காட்சியை புடைப்பு சிற்பம் மூலம் உணரலாம். முன்பு தூக்குக் கோல் பொருள் வைக்கும் பகுதியை தோலினால் வைத்து கைரால் கட்டியிருந்தனர் நாளடைவில் துணியை பயன்படுத்தினர் பின்பு ஒரு தட்டை பயன்படுத்தி பொருள் எடையை நிறுத்தனர்.
தூக்கு கோல் நிறுத்தல் அளவீடுகளில் இரண்டு கிலோ, ஒரு கிலோ, அரை கிலோ, கால் கிலோ என கோடு வரைந்து அதற்கு ஏற்றவாறு நூலினை நகர்த்தி எடை போட்டு வந்தது குறிப்பிடத்தக்கது என்றார்.பழங்கால பொருட்கள் சேகரிப்பாளர்கள் முகமது சுபேர் ,சந்திரசேகரன், இளம்வழுதி, பத்ரி நாராயணன் உள்ளிட்டோர் தனது சேகரிப்பு பொருட்களை காட்சிப்படுத்தி விளக்கினர்.
கல்லூரி கல்விப்புல முதன்மையர், துறைத்தலைவர்கள் , பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், இளங்கலை முதுகலை மாணவ மாணவிகள் உட்பட பலர் கண்காட்சியினை பார்வையிட்டனர்