காங்கேயம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு 7 வருடங்களாக அலைச்சல்: எல்லப்பாளையம்புதூர் பகுதி மக்கள் வேதனை

காங்கயம், இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு 7 வருடங்களாகியும் பட்டா கிடைக்காததால், கோரிக்கை விடுத்த மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

காங்கயம் தாலுகா, எல்லப்பாளையம் புதூர் ஊராட்சிக்கு உள்பட்ட புள்ளக்காளிபாளையம் பகுதியைச் சேர்ந்த 20 குடும்பங்கள் குடியிருக்க சொந்த வீடு இல்லாததால், கடந்த 2018 ஆம் ஆண்டு இலவச வீட்டு மனைப்பட்டா கேட்டு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். ஆனால், இன்று வரை இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, மேற்கண்ட 20 குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள், காங்கயத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து, இப்போராட்டத்துக்கு தலைமை வகித்த ஆதித்தமிழர் ஜனநாயகப் பேரவையின் தலைவர் அ.சு.பவுத்தன் கூறியதாவது: எல்லப்பாளையம் புதூர் ஊராட்சிக்கு உள்பட்ட புள்ளக்காளிபாளையம் பகுதியில் சொந்த வீடு இல்லாத 20 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், கடந்த 2018 ஆம் ஆண்டு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி காங்கயம் வட்டாட்சியர், காங்கயத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் ஆகிய அலுவலகங்களில் 7 ஆண்டுகளாக கோரிக்கை மனு கொடுத்து வந்தனர். இது தொடர்பாக காத்திருப்பு போராட்டம், ஆர்ப்பாட்டம், முற்றுகைப் போராட்டம் உள்ளிட்ட வழிகளிலும் போராடி வந்தனர்.

இதைத் தொடர்ந்து கடந்த 2024 ஆம் ஆண்டு திருப்பூர் அருகே கொடுவாயில், மேற்கண்ட 20 பேருக்கும் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன் தலைமையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பட்டா வழங்கப்பட்டது.

இந்தப் பட்டா வழங்கப்பட்ட பின்னரும் பல மாதங்களாக பட்டாவுக்கு உரிய நிலத்தை அளந்து கொடுக்கவில்லை. எனவே நிலத்தை அளந்து கொடுக்க வலியுறுத்,தி எல்லப்பாளையம் புதூர் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டோம். அப்போதைய காங்கயம் வட்டாட்சியர் உடனடியாக போராட்ட இடத்துக்கு வந்து, விரைவில் நிலத்தை அளந்து கொடுக்கிறோம் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து, காத்திருப்பு போராட்டம் கைவிடப்பட்டது.

அதைத் தொடர்ந்து, நில அளவீடு செய்யப்படவுள்ள நிலத்தைப் பார்த்த 20 பட்டாதாரர்களும் அதிர்ச்சியடைந்தனர். ஏனெனில் அந்த நிலம் மண் மேடாக, வீடு கட்டி வசிப்பதற்குத் தகுதியற்ற இடமாக இருந்தது. இதனால் அதிருப்தியடைந்த பயனாளிகள், வேறு இடத்தில் நிலம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வட்டாட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நடவடிக்கைக்காக, மேற்கண்ட 20 பேரின் அசல் பட்டாக்களை காங்கயம் வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர். இந்நிலையில் தற்போதுவரை வேறு புதிய இடத்திற்கானபட்டா வழங்கப்படவில்லை. புதிய இடத்திற்கான பட்டா வழங்க வலியுறுத்தி, காங்கயத்தில் உள்ள ஆதிதிராவிட நலத்துறை தனிவட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம், என்றார்.

இது குறித்து, ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் ஜெகஜோதி கூறியபோது, மேற்கண்ட 20 குடும்பங்களுக்கும் புதிய இடத்தில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான பட்டாவும் தயார் நிலையில் உள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் நடைபெறவுள்ள அரசு நிகழ்ச்சியின் போது, அமைச்சர் தலைமையில் இவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். இதையடுத்து, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட புள்ளக்காளிபாளையம் பகுதி மக்கள் கலைந்து சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *