திருச்சி உறையூர் எஸ் எம் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் ஏழு நாள் சிறப்பு முகாம் சீராதோப்பு பாரதியார் குருகுல வளாகத்தில் டிஜிட்டல் கல்வி அறிவில் இளைஞர்களின் பங்கு தலைப்பில் நடைபெறுகிறது.

முகாமில் ஆரோக்கியமான வாழ்க்கை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.பள்ளி தலைமை ஆசிரியர் இலட்சுமி நாராயணன் தலைமை வகித்தார். பேராசிரியர் முனைவர் சாம்பசிவம் முன்னிலை வகித்தார்.
அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் தியான பயிற்சி அளித்து ஆரோக்கிய வாழ்க்கை குறித்து பேசுகையில், ஒவ்வொரு மனிதனும் உடல் மன ஆரோக்கியத்தை பேணி பாதுகாக்க ஆரோக்கிய வாழ்க்கையை பின்பற்ற வேண்டும்.
ஒவ்வொருவரும் சமச்சீர் உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். உணவில் பழங்கள், காய்கறிகள்,கீரைகள், தானியங்கள், புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளைத் தவிர்க்கவும். தினமும் தேவையான அளவு தண்ணீர் குடிப்பது உடல் நலத்திற்கும், உடல் உறுப்புகளின் செயல்பாட்டிற்கும் அவசியம் ஆகும். தினமும் உடற்பயிற்சி செய்வது உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும். தினமும் ஏழு மணி நேரம் ஆழ்ந்த உறக்கம் அவசியம். இது உடல் புத்துணர்ச்சி பெறவும், மனதை அமைதிப்படுத்தவும் உதவுகிறது.
யோகா தியான பயிற்சி மன அழுத்தத்தைக் குறைக்கும் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும், ஏதேனும் உடல்நலப் பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே கண்டறிய வழக்கமான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.பல் துலக்குதல், உடலை தூய்மையாக வைத்துக் கொள்ளுதல் போன்ற தனிப்பட்ட சுகாதார பழக்கங்களை பின்பற்றுவது நோய்கள் பரவாமல் தடுக்கும். தினசரி நாற்பது நிமிடங்கள் நடைபயிற்சியினை மேற்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் என்றார். முன்னதாக நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஸ்ரீதர் வரவேற்க, நிறைவாக விக்ரம் வீரப்பன் நன்றி கூறினார்.