திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் பதிவு தபால் சேவை நினைவுகள் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் செயலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் துவக்க உரையாற்றினார். தலைவர் லால்குடி விஜயகுமார் தலைமை வகித்தார்.
நிறுவனர் நாசர், பொருளாளர் தாமோதரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். அஞ்சல் தலை சேகரிப்பாளர் காசிநாத் பதிவு தபால் சேவை நிறைவு குறித்து பேசுகையில்,தபால் தலை சேகரிப்பு என்பது அஞ்சல் தலைகளையும், அதனுடன் தொடர்புடைய தபால் குறிகள், முத்திரையிடப்பட்ட உறைகள் போன்ற பொருட்களையும் சேகரிக்கும் ஒரு பொழுதுபோக்காகும்.
இது உலகின் மிகவும் பிரபலமான பொழுது போக்குகளில் ஒன்றாகும். இது ஒரு நாட்டின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் அடையாளம் பற்றிய தகவல்களைத் தரும் ஒரு சிறந்த வழியாகும். அவ்வகையில் பதிவு தபால் நிறுத்தமும் ஒரு வரலாறு பதிவாகிவிட்டது.இந்திய அஞ்சல்துறையில் பதிவு தபால் சேவை நிறைவு பெற்று 2025 அக்.1-ம் தேதி முதல் விரைவு தபால் சேவையுடன் இணைக்கப்பட்டது. இதற்காக கர்நாடகா அஞ்சல் வட்டம் சார்பில் நினைவர்த்த பதிவுத்தபால் உரையை வெளியிட்டு உள்ளது.இந்திய அஞ்சல் துறை சேவையானது 1766-ம் ஆண்டு கிழக்கு இந்திய கம்பெனி ஆட்சியில் வாரன் ஹேஸ்டிங்ஸ் என்பவரால் கம்பெனி மெயில் தொடங்கப்பட்டது.
1854-ம் ஆண்டு டல்ஹவுசி பிரபுவால் சீரமைக்கப்பட்டு, அஞ்சல் கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவே அதிகாரப்பூர்வ இந்திய அஞ்சல் துறை தொடங்கப்பட்ட ஆண்டாக கருதப்படுகிறது. இந்திய அஞ்சல் துறையில் தற்போது1.59 லட்சத்துக்கும் மேற்பட்ட அஞ்சல் நிலையங்கள் கட்டமைப்புடன் உலகின் மிகப்பெரிய அஞ்சல்துறையாக இந்திய அஞ்சல்துறை செயல்படுகிறது. இந்திய அஞ்சல் துறை மூலமாக பல்வேறு சேவைகள் மக்களுக்கு வழங்கப்படும் நிலையில், இவற்றில் பதிவு தபால் சேவை முக்கியமானதாக இருக்கிறது. பதிவு தபால் சேவை 1854-ல் இந்திய அஞ்சல் துறையால் அறிமுகப்படுத்தப்பட்டது. நீதிமன்றம், வங்கி, அரசு துறை சார்ந்த கடிதங்கள் உள்ளிட்டவை பதிவு தபால்கள் மூலம் அனுப்பப்படுகின்றன.
முக்கிய ஆவணங்கள், சான்றுகளை அனுப்பும் போது, வாடிக்கையாளர்களின் முதல் தேர்வாக பதிவு தபால்கள் இருக்கின்றன. அதாவது, பதிவு தபால் யாருக்கு அனுப்பப்படுகிறதோ அவரே பெற முடியும் என்பது இதன் தனிச்சிறப்பாகும். பாதுகாப்பான ஆவண விநியோகத்துக்கு பதிவு செய்யப்பட்ட அஞ்சல் நம்பகமான சேவையாக இருந்தது.
அஞ்சல் செயல்பாடுகளை நவீனமயமாக்கும் நோக்கில், 171 ஆண்டு கால சேவையாக திகழும் பதிவு தபால் சேவை அக்.1-ம் தேதி முதல் சேவை நிறுத்தப்பட்டு, விரைவு தபால் சேவையுடன் இணைக்கப்பட்டது.அதாவது, டிஜிட்டல் விருப்பங்களால், பதிவு செய்யப்பட்ட தபால் பயன்பாடு குறைந்து, மேம்பட்ட கண்காணிப்பு, வேகமான விநியோக நேரம் மற்றும் சிறந்த செயல்பாட்டுத் திறன் கொண்ட விரைவு தபால் சேவையுடன் இணைக்கப்பட்டது என்றார். அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் அன்பழக பாண்டியன்,சிவக்குமார், இளம்வழுதி, அருள்மொழி தேவன், முத்துராம் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்