பரமத்திவேலூர், மே.25
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் அருண்ராஜ் முன்னிலையில் தி.மு.க,
பா.ம.க உள்ளிட்ட பல்வேறு மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட 1000 க்கும் மேற்பட்டோர் அக் கட்சியிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.
பரமத்தி வேலூர் தனியார் திருமண மண்டப வளாகத்தில் நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மகிழ் பிரபாகரன், முன்னாள் கபிலர்மலை ஒன்றிய தி.மு.க செயலாளர் கே. கே.சண்முகம், முன்னாள் வெங்கரை பேரூர் கழக செயலாளர் ராமலிங்கம், வழக்கறிஞர் கே. சி.மோகன் உள்ளிட்ட கட்சி முக்கிய பொறுப்பாளர்களும் பல்வேறு மாற்றுக் கட்சியினரும் அக்கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில், நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் சதீஷ்குமார்,நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் திலீபன், மணிகவுண்டர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினரும்,தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருமான அருண்ராஜ் கலந்துகொண்டு தி.மு.க உள்ளிட்ட மாற்றுக் கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள்,மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினரை வரவேற்று சிறப்பரையாற்றினார்.
த.வெ.க தொடங்கி இரண்டரை ஆண்டுகளில் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர், அந்த மாற்றத்தை முதலமைச்சர் விஜயால் மட்டுமே கொடுக்கும் முடியும் என நம்பியதால் மாபெரும் வெற்றியை வாரி வழங்கியுள்ளனர். இந்த வெற்றி தமிழகத்தில் மட்டுமல்லாது இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ள வெற்றியாகும்.
மக்கள் வைத்துள்ள நம்பிக்கை முழுமையாக காப்பாற்றப்படும் எனவும் இன்னும் 50 ஆண்டு காலத்திற்கு தமிழகத்தில் தமிழக வெற்றிக்கழகமே தமிழகத்தை ஆளும் எனவும் புதிதாக இணைந்துள்ள மாற்றுக் கட்சியினர் த.வெ.க தொண்டர்களுடன் இணைந்து கட்சியை வளர்த்து பலப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில் பரமத்தி, வேலூர், பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை பேரூர் கழகச் செயலாளர்களும்,பரமத்தி, கபிலர்மலை, மோகனூர், எலச்சிபாளையம் ஒன்றிய கழகச் செயலாளர்களும்,மாவட்ட பொறுப்பாளர்களும் தொண்டர்களும், மகளிரணி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.