புதுச்சேரியில் வருகின்ற 15.08.2026 அன்று சுதந்திர தின விழா 2026-ஐ முன்னிட்டு, மகாத்மா காந்தி திடல் அருகிலுள்ள கடற்கரைச் சாலையில் நடைபெறவுள்ள சுதந்திர தின விழா 2026-ல் முதலமைச்சர் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறையின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொள்ள உள்ளார்கள். மேலும் விழாவில் சட்டமன்ற தலைவர், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசுத்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், அரசியல் கட்சித் தலைவர்கள், பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள், மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.
அதே நாள் மாலை லோக் நிவாஸில் நடைபெறவுள்ள ‘At Home’ நிகழ்ச்சி துணைநிலை ஆளுநர் அவர்கள் தேநீர் விருந்து அளிக்கும் விழாவும், மேலும் 16.08.2026 அன்று கீழூரில் நடைபெறவுள்ள கொடியேற்று விழா மற்றும் அன்று மாலை கம்பன் கலை அரங்கில் நடைபெறவுள்ள சுதந்திரப் போராட்டத் தியாகிகளை கௌரவிக்கும் விழா ஆகியவற்றை முன்னிட்டு, அவற்றை சிறப்பாகவும் சீர்மையாகவும் நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் (22.07.2026) புதுச்சேரி தலைமைச் செயலகத்திலுள்ள கருத்தரங்கு வளாகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு செய்தி மற்றும் விளம்பரத் துறையின் அரசு செயலர் முகமது அசான் அபித், IAS அவர்கள் தலைமை தாங்கினார்.
ஆலோசனைக் கூட்டத்தில் கலை மற்றும் பண்பாட்டுத் துறை இயக்குநர் சக்திவேல், செய்தி மற்றும் விளம்பரத் துறையின் உதவி இயக்குநர் முனைவர் குலசேகரன், மக்கள் தொடர்பு அதிகாரி வசந்தன், காவல்துறையின் கண்காணிப்பாளர்கள் பத்துவச்சலம், நல்லாம்பாபு, சிந்தா கோதண்டராமன், A. R. Wing சார்பு செயலர் அழகேசன் புதுச்சேரி நகராட்சி ஆணையர் ஸ்ரீஜித், கல்வித்துறையின் கூடுதல் இயக்குநர் மோகன் சுந்தரி, கல்வித்துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அதிகாரிகள், பால்பவன் அதிகாரிகள், NCC மற்றும் NSS அதிகாரிகள் மற்றும் விழா தொடர்பான பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், சுதந்திர தின விழாவை சிறப்பாக நடத்த தேவையான முன்னேற்பாட்டு பணிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், ஒழுங்குமுறை நடவடிக்கைகள், பங்கேற்பு துறைகளின் ஒருங்கிணைப்பு, மற்றும் நிகழ்ச்சிகள் தடையின்றி நடைபெற வேண்டிய நிர்வாக ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
மேலும், பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கும் இவ்விழாக்கள் அரசு மரியாதைக்கு ஏற்ப சிறப்பாக நடைபெறுவதற்கு துறை வாரியான பொறுப்புகள் குறித்தும் தொடர்புடைய அதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.