மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ்
இராஜகோபால சுவாமி கோயிலில் ஆடிப்பூர தேரோட்டம்
மன்னார்குடி இராஜகோபால சுவாமி ஆலயத்தில் செங்கமலத்தாயார் ஆடிப்பூர தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி இராஜகோபாலசுவாமி கோவிலில் செங்கமலத்தாயார் ஆடிப்பூர பிரம்மோட்சவம் கடந்த 14 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வந்தது. இதன் ஒவ்வொரு தினமும் இரவு செங்கமலத்தாயார் வெவ்வேறு வாகனங்களில் வீதியுலா வந்தார்.
இதன் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று மாலை நடைபெற்றது. தேரில் சர்வ அலங்காரத்துடன் எழுந்தருளிய செங்கமலத்தாயார் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
பின்னர் தேசிய மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் பக்தர்கள் பொதுமக்கள் பலர் தேரை வடம் பிடித்து இழுத்தனர். யானை செங்கம்மா முன்னேவர தேர் கம்பீரமாக ஆடி அசைந்து வந்தது.
செங்கமலத்தாயார் எந்த ஒரு உற்சவத்தின் போதும் கோவிலின் ராஜகோபுரத்தைவிட்டு வெளியில் செல்வது கிடையாது என்பதால் இவர் படிதாண்டா பத்தினி என பக்தர்களால் வணங்கப்படுகிறார்.
எனவே தாயாரின் பிரமாண்ட தோரேட்டமும் கோவிலின் உள் பிரகாரத்திலேயே நடைபெறுவது சிறப்பாகும். அதேபோல பாரம்பரியமாக மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 91வது ஆண்டாக தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
தேர் கோவிலின் 4 பிரகாரங்கள் வழியாக சுற்றி நிலைக்கு வந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தாயாரை தரிசனம் செய்தனர்.