பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன்
பாபநாசத்தில் மயிலாடுதுறை -மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் துவக்க விழா …
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு. ….
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ரயில் நிலையத்தில் மயிலாடுதுறை- மைசூர் எக்ஸ்பிரஸ் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி கோட்ட ரயில்வே மேலாளர் அன்பழகன் தலைமை வகித்து வரவேற்று பேசினார்.
முதுநிலை கோட்ட இயக்க மேலாளர் ஹரிகுமார்,முதுநிலை கோட்ட வணிக மேலாளர் செந்தில்குமார் ,முது நிலை கோட்ட இயக்க மேலாளர்( கிழக்கு) ரவிக்குமார், ஆகிய முன்னிலை வகித்தனர்.
விழாவில் மாநிலங்களவை உறுப்பினர்
சு. கல்யாணசுந்தரம், பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன் , ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
விழாவில் மத்திய தகவல் ஒளிபரப்பு, மீன்வளம் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன் கலந்து கொண்டு பாபநாசம் ரயில் நிலையத்தில் மயிலாடுதுறை மைசூர் இடையே இயக்கப்படும் விரைவு ரயில் நின்று செல்வதற்கான தொடக்க நிகழ்ச்சியை குத்துவிளக்கு ஏற்றி கொடியசைத்து துவங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது ….

இந்தியாவில் ரயில்வே துறை அதிவேகமாக வளர்ந்து வருகிறது. இந்த துறை தொடர்பாகத் தமிழ்நாட்டிலிருந்து செல்லும் அனைத்து கோரிக்கைகளும் உடனடியாக நிறைவேற்றுவதற்கான நடவடிக்கை மத்திய அரசால் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த நிதியாண்டில் ராமேஸ்வரம், மதுரை, காட்பாடி, சென்னை எழும்பூர், கன்னியாகுமரி ஆகிய 5 ரயில்நிலையங்களுக்கு ரூ. 1900 கோடி மதிப்பில் சர்வதேச அளவில் தரம் உயர்த்துவதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதே போல் அம்ரூத் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 73 ரயில் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன, இதில் தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய ரயில் நிலையங்களுக்கு தலா ரூ. 10 கோடி மதிப்பில் மேம்படுத்தப்படுகிறது.
கிராமங்களில் விளையும் பொருட்கள் நகரப்பகுதிகளுக்குச் செல்லும் வகையில் இந்த ரயில் நிலையத்தில் வாழைப்பழம் மற்றும் ஆர்கானிக் பொருட்கள் விற்பனை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
முதன்முறையாக கடல்பாசிக்காக ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் ரூ.126 கோடி மதிப்பில் பூங்கா அமைப்பதற்கான முடிவு செய்யப்பட்டது. இதற்காக தமிழக அரசும் அதற்கான திட்ட அறிக்கையும் வழங்கியுள்ளதற்கு,மத்திய அரசும் ஒப்புதல் வழங்கப்பட்டு விட்டது. இந்த கடல் பாசி அனைவருக்கும் பயன்படுவதால், அதனை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் .
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் முன்னதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகனுக்கும், மாநிலங்கவை உறுப்பினர் சு.கல்யாணசுந்தரத்திற்கும் பாபநாசம் ரயில் பயணிகள் சங்க தலைவர் சரவணன், பாபநாசம் வர்த்தக சங்க தலைவர் குமார், பாரதீய ஜனதா கட்சி பாபநாசம் ஒன்றிய தலைவர் வி. ஆர். செல்வம் , மற்றும் திமுக, பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டு வரவேற்பு அளித்தனர்.