தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் இதயம் நல்லெண்ணெய் நிறுவனருடன் பள்ளி மாணவர்கள் கலந்துரையாடல் நடைபெற்றது.
பள்ளி ஆசிரியை முத்துலட்சுமி வரவேற்றார். பள்ளி தலைமையாசிரியர் லெ . சொக்கலிங்கம், ரோட்டரி சங்கத்தின் முன்னாள் துணை ஆளுநர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதயம் நல்லெண்ணெய் நிறுவனரும், ரோட்டரி சங்கத்தின் ஆளுநருமான முத்து நிகழ்விற்கு தலைமை தாங்கி பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடி பேசும்போது , திருக்குறள் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது.
திருக்குறளின் மூலமாக நாம் பல்வேறு தகவல்களை தெரிந்துகொள்ள முடியும்.திருக்குறளின் மூலமாகத்தான் காந்தியடிகள் பல தருணங்களில் முக்கியமான விஷயங்களை கற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.
சாதிக்க வேண்டும் என்கிற எண்ணமும், என்னால் முடியும் என்கிற தன்னம்பிக்கை இருந்தால் மட்டுமே நம் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும், காந்தியடிகள் தனது வாழ்க்கையில் அகிம்சை, சகிப்புத்தன்மை இரண்டையும் மிக முக்கியமானதாக கருதினார்.
இவை இரண்டையும் திருக்குறள் தனக்கு கற்றுக் கொடுத்ததாகவும் பல்வேறு இடங்களில் தெரிவித்துள்ளார். நீங்களும் வாழ்க்கையில் சாதிக்கலாம். அதற்கு உங்களுக்கு தன்னம்பிக்கை வேண்டும். தொடர்ந்து அயராத உழைப்பு இருந்தால் வெற்றி உங்களை தேடி வரும். குறிப்பிட்ட பகுதியில் இருந்த எங்களது வியாபாரம் உலகம் முழுவதும் வர்த்தக படுத்தப்பட்டது.இதன் மூலம் எனது கனவு நினைவானது. என்று பேசினார். மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்தார். சிறப்பாக பதிலளித்த மாணவர்களுக்கு 200 ரூபாய் மதிப்புள்ள பரிசு பொருட்களை வழங்குவதாக அறிவித்தார்.நிகழ்வில் இதயம் நல்லெண்ணெய் நிறுவனத்தின் விற்பனை மேலாளர் ராஜ்குமார், அலுவலர் ஸ்டீபன் ஆனந்த், தேவகோட்டை தொழிலதிபர் ராம்குமார், ரோட்டரி சங்கத்தின் நிர்வாகிகள் ராமநாதன், சொர்ணலிங்கம், ஜோசப் செல்வராஜ், திருவேங்கடம் உட்பட பலரும் நிகழ்வில் பங்கேற்றனர். நிறைவாக ஆசிரியை முத்துமீனாள் நன்றி கூறினார்.