எஸ்.டி.பி.ஐ கட்சியின் மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடு குறித்து மாநில தலைவர் நெல்லை முபாரக் அறிவிப்பு….
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் மதுரையில் பங்கேற்ற நிகழ்ச்சியில், கட்சியின் மாநில துணைத் தலைவர் அப்துல் ஹமீது, மாநில பொதுச் செயலாளர்கள் அகமது நவவி, அச.உமர் பாரூக், நிஜாம் முகைதீன், நஸூருதீன், மாநில பொருளாளர் அமீர் ஹம்ஸா, மாநில செயலாளர் அபுபக்கர் சித்திக் மற்றும் மதுரை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்ததாவது:
ஜனவரி 7 ம் தேதி அன்று மதுரை மாநகரில் மாபெரும் ‘மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாட்டை எஸ்.டி.பி.ஐ. கட்சி நடத்துகின்றது. அனைத்து மதச்சார்பற்ற ஜனநாயக மாநாட்டில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் அகில இந்திய தலைவர் எம்.கே.ஃபைஸி, மாண்புமிகு தமிழக எதிர்கட்சித் தலைவரும், முன்னாள் தமிழக முதல்வரும், அஇஅதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்கள்.
அதேபோல் தவத்திரு திருவடிக்குடில் அடிகளார், பேராயர் யுவான் அம்புரோஸ், இஸ்லாமிய ஆராய்ச்சி மைய நிறுவனர் மவுலவி ஷாஹூல் ஹமிது ஜமாலி, ஈரோடு நூருல் இஸ்லாம் மஸ்ஜித் தலைமை இமாம் மவுலவி முஹம்மது தையிப் தாவூதி, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கேரள மாநில தலைவர் மூவாற்றுப்புழா அஷ்ரப் பாகவி, கர்நாடகா மாநில தலைவர் அப்துல் மஜீத் மற்றும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்த விருக்கின்றனர்.
நம் இந்திய தேசத்தின் மதச்சார்பின்மையை பாதுகாக்க இந்த மாநாட்டில் அனைவரும் திரளாக கலந்துகொள்ள வேண்டும். போக்குவரத்துத் துறை காலிப்பணியிடங்களை நிரப்புதல், விடுக்கிற ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம், ஓய்வூதிய அகவிலைப்படி உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜனவரி 9 ம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
ஏற்கனவே, இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நோட்டீஸ் வழங்கி இருந்த நிலையில் நடத்தப்பட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த காரணத்தால், இந்த வேலை நிறுத்த அறிவிப்பை தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
போக்குவரத்து தொழிலாளர்களின் நலன் சார்ந்த இந்த கோரிக்கைகள் என்பது புதிய கோரிக்கை அல்ல. கடந்த ஓராண்டுக்கும் மேலாக தமிழக அரசிடம் தொடர்ந்து முன்வைக்கப்பட்ட கோரிக்கையாகும். இந்த கோரிக்கை களை செயல்படுத்த அரசு மேற்கொண்ட காலதாமதமும். அலட்சியமுமே இந்த வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு முக்கிய காரணமாகும்.
இந்த வேலை நிறுத்தப் போராட்ட அறிவிப்பு காலம் என்பது பொங்கல் பண்டிகை விடுமுறை காலம் என்பதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாவார்கள். ஆகவே, தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றி, வேலை நிறுத்தத்தை கைவிடச் செய்ய வேண்டும் என அவர் தெரிவித்தார்.