வலங்கைமானை அடுத்த கீழ அமராவதி பகுதியில் உள்ள வெட்டாறு பாலத்தின் மேற்பரப்பில் தார் அட்டை ஓட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை அடுத்த கீழ அமராவதியில் கும்பகோணம்- மன்னார்குடி சாலையில் வெட்டாற்றில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் முன்னதாக பாலம் கட்டப்பட்டது.
இந்நிலையில் பாலத்தின் உறுதி தன்மையை மேம்படுத்தும் வகையிலும், பாலத்தின் ஆயுள் காலத்தை நீட்டிக்கும் வகையிலும் பாலத்தின் மேற்பரப்பில் தார் அட்டைகள் ஒட்டும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது.
இப்பணிகள் மேற்கொள்ளும் வகையில் பாலத்தின் ஒரு பகுதி அடைக்கப்பட்டு, பாலத்தின் மேற்பரப்பில் முன்னதாக போடப்பட்ட தார் சாலை அகற்றப்பட்ட நிலையில் தார் அட்டை ஒட்டும் பணி நடைபெற்றது. பாலத்தின் மேல்பரப்பில் தார் அட்டை ஒட்டப்படுவதால், பாலத்தில் ஏற்படும் சிறிய அளவிலான விரிசல்கள் தார் அட்டைகள் ஒட்டுவதால் சரியாகும் என்றும், பாலத்தின் நீர்க்கசிவு தடுக்கப்பட்டு பாலத்தின் ஆயுள் காலம் நீட்டிக்கும் வகையிலேயே இந்த அட்டை ஒட்டப்படுவதாக கூறப்பட்டது.
தார் அட்டை ஒட்டும் பணி முடிவுற்ற பிறகு மேற்பரப்பில் மீண்டும் தார் சாலை அமைக்கப்பட உள்ளது என கூறப்பட்ட நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பணிகள் நடைபெறவில்லை. முன்னதாக பாலத்தின் மைய பரப்பில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டதால் போக்குவரத்து பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுவதோடு, சிறிய அளவில் அவ்வப்போது விபத்துகளும் நடைபெற்று வருகிறது.
பாலத்தின் உறுதித் தன்மையை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட பணி, ஆமை வேகத்தில் நடைபெறுவதால் பாலத்தின் உறுதித் தன்மை பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே மேலும் காலதாமதம் செய்யாமல் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதை அடுத்து தார் அட்டை ஒட்டப்பட்ட இடத்தில் தார் சாலை அமைக்கும் பணி முடிவுற்றது. மற்றொரு பகுதியில் தற்போது தார் அட்டை ஒட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.