மணலிபுதுநகர், பொன்னேரி நெடுஞ்சாலையில், பட்டமந்திரி முதல், எம்.எப்.எல்., சந்திப்பு வரையும், மணலி விரைவு சாலையில், சாத்தாங்காடு சந்திப்பு வரை, 13 கி.மீ., துாரத்திற்கு, கன்டெய்னர் லாரிகள் தனி வரிசையில் செல்ல, தற்காலிக கான்கிரிட் தடுப்புக் கற்கள் வைக்கப்பட்டு, தனி பாதை ஏற்படுத்தப்பட்டது.
இந்நிலையில், தற்காலிக கான்கிரிட் தடுப்புக் கற்கள் மற்றும் இரும்பு தடுப்புகள் தெரியாமல், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி உயிரிழப்பது தொடர்கதையாக உள்ளது.
இதனை கண்டித்தும், தடுப்பு கற்களை உடனடியாக அகற்ற கோரி, சென்னை கன்டெய்னர் டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் சங்கம் உள்ளிட்ட மூன்று சங்கத்தைச் சேர்ந்த உரிமையாளர்கள், ஓட்டுனர்கள் என, 300 க்கும் மேற்பட்டோர், மணலி – ஆண்டார்குப்பம் செக்போஸ்ட் சந்திப்பில், சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதன், பொன்னேரி நெடுஞ்சாலை, மணலி விரைவு சாலை, மாதவரம் விரைவு சாலைகளில், பல கி.மீ., துார த்திற்கு வாகனங்கள் தேங்கின. இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அப்போது, விபத்து ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புக் கற்களை அகற்ற வேண்டும் என, அவர்கள் முழக்கமிட்டனர்.
இரண்டு மணி நேரம் தொடர்ந்த மறியல் பற்றி தகவலறிந்த, செங்குன்றம் துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார், அவர்களிடம் சமாதானம் பேசினர்.
அதன்படி, இது குறித்து, ஒரு வாரத்தில் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்படும் என, உறுதியளித்தை தொடர்ந்து, அவர்கள் கலைந்து சென்றனர்.