பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையே மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டியில் வலங்கைமான் தொழுவூர் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி கோப்பையை தட்டி சென்றது. 4 பிரிவுகளில் வென்று சாதனை படைத்துள்ளது.
நாகை மற்றும் புதுச்சேரி மண்டல அளவில் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையேயான 2023- 2024 ஆம் ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டிகளை, வலங்கைமான் தொழுவூர் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி ஏற்று நடத்தி வருகிறது. அதில் இறுதிப் பகுதியான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தடகள போட்டிகள் பிப்ரவரி 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) விளையாட்டு பயிற்சி மைதானம், மயிலாடுதுறையில் வைத்து நடைபெற்றது.
போட்டிகளை மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் ஏ.பி.மகாபாரதி ஐ ஏ எஸ் துவக்கி வைத்தார். இதில் 15 பாலிடெக்னிக் கல்லூரிகளில் இருந்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டிகளில் வலங்கைமான் தொழுவூர் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு நான்கு பிரிவுகளில் கோப்பைகளை வென்று புதிய சாதனை படைத்துள்ளனர்.
1.ஆண்களுக்கான தடகள போட்டிகளில் தனிநபர் சாம்பியன்ஷிப் பட்டம், 2.ஆண்களுக்கான தடகளப்போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டம், 3.பெண்களுக்கான அனைத்து விளையாட்டு போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டம், 4.பெண்களுக்கான அனைத்து விளையாட்டு போட்டிகள் மற்றும் கடக ல போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டம். பரிசளிப்பு விழாவில் மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினர் பெண்கள் கலைக் கல்லூரி, முதல்வர் முனைவர் பி. பத்மனி வெற்றி பெற்ற அனைவருக்கும் கோப்பைகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்.
வெற்றி பெற்ற வலங்கைமான் தொழுவூர் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவிகளை கல்லூரியின் முதல்வர் எல்.ஜான் லூயிஸ் முதல்வரின் நேர்முக உதவியாளர் இராம.வேல்முருகன், துறைத்தலைவர்கள், ஆசிரியர்கள், பணியாளர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் ம.அகஸ்டின் ஞானராஜ் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.