வலங்கைமான் அருகே உள்ள விருப்பாச்சிபுரம் சிமிலி மேட்டு தெருவில் உள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் அதி விமர்சையாக நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள விருப்பாச்சிபுரம் ஊராட்சியில் சிமிலி மேட்டு தெருவில், மெயின் ரோட்டில் உள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கடந்த நான்காம் தேதி திங்கட்கிழமை மாலை ஏழு மணிக்கு ஸ்ரீ விநாயகர் வழிபாடு, எஜமான சங்கல்பம் உள்ளிட்ட பல பூஜைகள் நடைபெற்றது.
நேற்று செவ்வாய்க்கிழமை காலை 8:30 மணிக்கு விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமம், நவக்கிரகம், மகாலட்சுமி ஹோமம், புனித நீர் எடுத்தல் நிகழ்ச்சியும், மாலை 5:00 மணிக்கு விநாயகர் வழிபாடு, மகா சங்கல்பம், ஆச்சாரியா வர்ணம், பூர்வாங்கம், யாக பூஜைகள், ஓமம் உள்ளிட்ட பூஜைகளுடன் தீபாராதனை காலம் -1, இன்று புதன்கிழமை காலை 7 மணிக்கு யாக பூஜைகள் ஆரம்பம், 9- மணிக்கு தீபாராதனை காலம் 2 , உடன் கலசங்கள் திருக்கயிலாய ஸ்ரீகந்த பரம்பரை சூரியனார் கோவில் ஸ்ரீ வாமதேவ சிவாக்கிரக யோகிகள் ஆதீனம் 28 ஆவது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிய பரமாச்சார்ய சுவாமிகள் முன்னிலையில் புறப்பட்டு, காலை 10 மணிக்கு விமான கும்பாபிஷேகமும், 10:30 மணிக்கு மூலஸ்தான மகா கும்பாபிஷேகமும் நடைபெற்று தீபாராதனையும், அருட்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. மாலை 6:00 மணிக்கு மகா அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்று,
ஸ்ரீ வரசித்தி விநாயகர் வீதி உலா காட்சியும் நடைபெற்றது. யாகசாலை பூஜைகளை சர்வ சாதகம் விசலூர் சிவஸ்ரீ கங்காதர சிவாச்சாரியார் குழுவினர் மற்றும் ஆலய அர்ச்சகர் வலங்கைமான் இராஜ.பால மாரியப்பன், நேர்முக வர்ணனையை அம்மாபேட்டை புலவர் பன்னீர்செல்வம் ஆகியோர் மிகச்சிறப்பாக செய்து இருந்தனர்.
விழா ஏற்பாடுகளை ஆலய தக்கார் அ. ரமேஷ்,ஆய்வாளர் கே. மும்மூர்த்தி, அறங்காவலர் எஸ். சம்பத், கிராமவாசிகள் மற்றும் திருப்பணி விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.