மதுரை மாநகராட்சி இளங்கோ மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாணவர்கள் பத்தாவது வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவதை நேரில் பார்வையிட்டார்.
மதுரை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு 26.03.2024 முதல் 08.04.2024 வரை நடைபெறவுள்ளது. பொதுத் தேர்வு தொடர்பாக காவல்துறை, மின்சார வாரியம், போக்குவரத்து துறை & கல்வித்துறை அலுவலர்களுடன் மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தப்பட்டது.
மதுரை மாவட்டத்திற்கு கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள நாகராஜமுருகன் இயக்குநர். பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி அவர்களின் அறிவுரைகளின்படி முதன்மைக் கண்காணிப்பாளர்கள், கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், அறைக் கண்காணிப்பாளர்கள், பறக்கும் படை நிலையான படை உறுப்பினர்கள் மற்றும் அனைத்து ஆய்வு அலுவலர்களுக்கும் வழிகாட்டி நெறிமுறைகள் வழங்கி தேர்வு பணிகள் எவ்வித இடர்பாடுமின்றி சிறப்புடன் நடைபெற ஆலோசனை வழங்கப்பட்டது.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 488 பள்ளிகளைச் சார்ந்த 38,389 ( மாணவிகள்-18,970, மாணவர்கள் 19,419) மாணவ, மாணவியர்களும் 145 தேர்வு மையங்களில் தேர்வெழுதவுள்ளனர்.
மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் தலைமையில் பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்பொதுத் தேர்வில் முதன்மைக் கண்காணிப்பாளர்கள், கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், அறைக் கண்காணிப்பாளர்கள், பறக்கும் படை உறுப்பினர்கள் என மொத்தம் 3,282 பேர் தேர்வுப் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்
ஆய்வு அலுவலர்கள் தலைமையில் சிறப்பு பறக்கும்படை 10 குழுக்கள் நியமனம் செய்யப்பட்டு இத்தேர்வினை கண்காணிக்க உள்ளனர். இவ்வாண்டு மாற்றுத்திறனாளிகள் 376 மாணவர்களுக்கு சொல்வதை எழுதுபவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தனித்தேர்வர்கள் 855 பேர் தேர்வெழுதவுள்ளனர். சிறைக் கைதிகள் 3 பெண்கள், 52 ஆண்கள் உட்பட 55 பேர் தேர்வு எழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது என
மாவட்ட ஆட்சியர் சங்கீதா, தெரிவித்துள்ளார்.