வலங்கைமான் தொழுவூர் அரசினர் பலவகை தொழில்நுட்ப கல்லூரியில் நூறு சதவீதம் வாக்குப்பதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு ஓவிய போட்டி நடைபெற்றது.
நாடாளுமன்றதேர்தலின் முதல் கட்டமாக, தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. கடந்த இருபதாம் தேதி வேட்பு மனு தாக்கல் துவங்கியது. நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் 100% வாக்குப்பதிவு உறுதிப்படுத்தும் விதமாக பல்வேறு முன்னெடுப்பு பணிகளை தேர்தல் ஆணையம் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ உத்தரவின் பேரில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி, வாக்காளர் கையெழுத்து இயக்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வலங்கைமானை அடுத்த தொழுவூர் அரசினர் பலவகை தொழில்நுட்ப கல்லூரியில் 100% வாக்கு பதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு ஓவிய போட்டி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வலங்கைமான் வட்டாட்சியர் ரஷ்யா பேகம், கல்லூரி முதல்வர் ஜான் லூயிஸ், தேர்தல் துணை வட்டாட்சியர் ரவி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.