திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெரு மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் தமிழகத்தின் தலை சிறந்த சக்தி தலங்களில் ஒன்றாகும்.
இவ்வாலயத்தில் வாரம் தோறும் ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் அதிக அளவில் பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அதேபோன்று ஆவணி மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளும் பக்தர்களும், பொதுமக்களும் திரளாக வருகை தருவார்கள். ஆவணிக்கடை ஞாயிறு அன்று தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இதில் ஏராளமான ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தி அம்மனை வழிபாடு செய்து செல்வார்கள். அதேபோன்று வருடம் தோறும் பங்குனி மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளும் புகழ்பெற்ற பாடைக் காவடி திருவிழா ஒரு மாத காலம் நடைபெறுவது வழக்கம்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த இவ்வாலயத்திற்கு வெளி சுற்று பிரகாரத்திற்கு மேற்கூரை கிடையாது. பாடைக்காவடி திருவிழா முன்னிட்டு ஒரு மாத காலம் மட்டும் தற்காலிகமாக பந்தல் அமைத்து பின்னர் பிரித்து விடுவது வழக்கமாக உள்ளது.
இவ்வாலயம் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கோடை காலங்களில் தாங்க முடியாத வெயிலிலும், மழைக்காலங்களில் மழையிலும் நனைந்தபடியே பக்தர்கள், பொதுமக்கள் வெளிப்பிரகாரத்தை சுற்றிவரும் நிலை பல ஆண்டு காலமாக உள்ளது.
எனவே இந்த வெளி பிரகாரத்திற்கு நிரந்தரமாக மேற்கூரை அமைத்து தர வேண்டும் எனவும். அப்படி மேற்கூரை அமைக்கும் வரை, தற்போது திருவிழாவுக்காக போடப்பட்ட பந்தலை ஆவணி மாதம் வரையாவது பிரிக்காமல் வைத்து, அதற்குள் நிரந்தர மேற்கூரை அமைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என பக்தர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.