ஆவத்துவாடி ஊராட்சிக்கு உட்பட்ட சுண்டகபட்டி கந்தர்மலையில் திடீர் காட்டுத்தீ – போச்சம்பள்ளி தீயணைப்பு வீரர்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர்
கிருஷ்ணகிரி மாவட்டம் அகரம் அருகே ஆவத்துவாடி ஊராட்சி கந்தர்மலை அமைந்துள்ளது. இம்மலையின் அடிவாரத்தில் பிரசித்தம் பெற்ற கந்தர் மலைமுருகன் கோவில் அமைந்துள்ளது. போச்சம்பள்ளி அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து வெப்பம் அதிகமாக காணப்படுகிறது. வெப்பத்தின் காரணமாக வயல்களில் உள்ள பயிர்கள் காய்ந்து வருகின்றன.
அந்தவகையில் மலையின் மீதுள்ள மரங்கள் காய்ந்து வரும் நிலையில், இன்று மதியம் கந்தர்மலையின் அடிப்பகுதியில் திடீரென காட்டுத்தீ பரவியுள்ளது. அந்த வழியே சென்ற ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள், மலைப்பகுதியில் காட்டுத்தீ பரவுவதை கண்டு போச்சம்பள்ளி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.
அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மலைப்பகுதிக்கு சென்று சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். இன்று அதிகாலை மலையடிவாரத்தில் குப்பைக்கு பொது மக்கள் தீவைத்துள்ளனர். அந்த தீயானது காற்றில் பரவி தீ பிடித்தருக்கலாம் என தெரிவித்தனர்.