ஈகைத் திருநாளாம் ரம்ஜான் பெருநாளில் இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாழ்த்துக்களை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
உலக மக்களுக்கு அன்பையும், அமைதியையும் போதிக்கும் நன்னாளாக இந்நாள் திகழ்கிறது. நபிகள் நாயகம் போதித்த உயரிய வாழ்க்கை நெறிகளையும், பண்புகளையும் உள்ளத்தில் தாங்கி நிற்கும் இஸ்லாமிய பெருமக்களுக்கு என்றும் துணையாக நிற்பதுதான் தி.மு.கழகம். மறைந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வழிநின்று அம்மக்களின் உரிமைக்கும், பாதுகாப்பிற்கும் அரணாக இருப்பவர் கழகத் தலைவர் தளபதி அவர்கள்.
நாட்டின் ஓர் இக்கட்டான நிலையில் இந்த விழாவை நாம் கொண்டாடுகிறோம். ஒரு தாய் மக்களான இந்தியர்களை தொடர்ந்து மதத்தின் பெயரால் கூறுபோட்டு அரசியல் நடத்தும் அற்பச் செயலுக்கு முடிவு கட்டும் தேர்தல் எதிரே நிற்கிறது. நாட்டின் ஜனநாயகம் காக்கவும், அரசியல் சட்டம் வலியுறுத்தும் மதச்சார்பின்மையை தொடர்ந்து கடை பிடிக்கவும் வழிவகுக்கும் கடமை நம் கண் முன் உள்ளது. இதையெல்லாம் மனதில் ஏற்று முடிவு எழுதும் நேரம் இது.
ரம்ஜான் பண்டிகை நாட்டின் எதிர்கால வெற்றியை கட்டியம் கூறுவதாக அமைய வேண்டும். ரம்ஜான் விழா நாளில் இஸ்லாமிய சகோதர, சகோதரகளின் உள்ளமெல்லாம் மகிழ்ச்சி பொங்க கழகத்தின் உளமார்ந்த வாழ்த்தினை மீண்டும் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
(இரா. சிவா)