சென்னை: பவுர்ணமி தினத்தையொட்டி இன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது
பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு மக்கள் கிரிவலம் மேற்கொள்வது வழக்கம். இதற்காக பக்தர்கள் பிற மாவட்டங்களில் இருந்து ரயில், பேருந்து மூலம் திருவண்ணாமலைக்கு வருகை தருவர். இதனால் திருவண்ணாமலையில் மக்கள் கூட்டம் அலைமோதும்.
இதனால் இன்று சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து தினமும் இயக்கக் கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதுகுறித்து போக்குவரத்து துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: இன்று சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து திருவண்ணாமலைக்கு கூடுதலான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.