மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவாரப் பாடல் பெற்ற தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது.

நவகிரகங்களில் செவ்வாய் ஸ்தலமான இங்கு அறுபடை வீடுகளுக்கு இணையாக செல்வ முத்துக்குமாரசுவாமி தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். கார்த்திகை தோறும் செல்வ முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம்.

ஆனி மாத கார்த்திகை திருநாளான இன்று செல்வ முத்துக்குமார சுவாமியை கார்த்திகை மண்டபத்தில் எழுந்தருள செய்தனர். தொடர்ந்து தருமபுரம் ஆதீனம் 27 வது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பிரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத பால், தயிர், சந்தனம், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் மற்றும் 16 வகையான திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. அதனை அடுத்து செல்வ முத்துக்குமார சுவாமிக்கு கார்த்திகை சண்முகர் தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *