திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் வலங்கைமான்- நீடாமங்கலம் சாலையில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள, வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் வாரந்தோறும் புதன்கிழமை நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்த வாரம் ஒழுங்குமுறை விற்பனை கூட செயலாளர் மல்லிகா (பொ) உத்தரவின் பேரில் பருத்தி மறைமுக ஏலம் நடைபெற்றது. பருத்தி ஏலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பருத்தியினை கொண்டு வந்தனர். ஆறு வியாபாரிகள் கலந்து கொண்டனர். பருத்தி அதிகபட்ச விலையாக புரிந்தால் 7,196 ரூபாய்க்கும், குறைந்தபட்ச விலையாக 6,609 ரூபாய்க்கும், சராசரி விலையாக குவிண்டால் 6,94 4 ரூபாய்க்கும் ஏலம் போனது. இந்த வாரம் நடைபெற்ற பருத்தி மறைமுக ஏலத்தில் 806. 96 குவிண்டால் பருத்தி 56 லட்சத்து 27 ஆயிரத்து 348 ரூபாய்க்கு ஏலம் போனது.
முன்னதாக பருத்திக்கு உரிய விலை கிடைக்கவில்லை என மறைமுக ஏலப்பட்டியல் வெளியிடுவதற்கு முன்னதாகவே விவசாயிகளின் ஒரு தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் ஒழுங்குமுறை விற்பனை கூட நிர்வாகிகள் மற்றும் வருவாய்த் துறையினர்,
காவல்துறையினர் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மறைமுக ஏல பட்டியல் ஒட்டப்பட்டது. இருப்பினும் விவசாயிகள் யாவரும் பருத்தி விலை குறைவு என பஞ்சை திரும்ப எடுத்துச் செல்லவில்லை. ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெறும் பருத்தி ஏலத்தில் விவசாயிகள் தங்களது பருத்தியை நன்கு உலர்த்தி கொண்டு வந்து ஏலத்தில் கலந்து கொள்ள வேண்டும். சரியான எடை மற்றும் நல்ல விலையில் பருத்தியை இடைத்தரகர்கள் இன்றி விற்பனை செய்து பயன்பெற ஒழுங்குமுறை விற்பனை கூட மேற்பார்வையாளர் வீராசாமி விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.