விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே என். புதூர் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் சாமி (வயது 54) இவருக்கு ராமலட்சுமி என்ற மனைவியும், போவையா என்ற மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.
இரண்டு மகள்களும் திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வரும் நிலையில் பெருமாள் சாமி, இவரது மனைவி மற்றும் அவரது மகன், மருமகள் என குடும்பத்துடன் நல்லமநாயக்கன்பட்டியில் செயல்பட்டு வரும் தனியார் நூற்பாலையில் வேலை பார்த்து வருகின்றனர்.
நூற்பாலையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஆலைக்கு வெளியே செல்வதற்காக ஆலையின் மையப்பகுதியில் புதிய கழிவு நீர் ஓடை கட்டப்பட்டு வருகிறது. இந்த கழிவு நீர் ஓடை சுவர்களில் டைல்ஸ் பதிப்பதற்காக பெருமாள் சாமி சிமெண்ட் பூச்சின் மீது துளை போட்டு கொண்டு இருந்துள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக பெருமாள் சாமி மீது மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். நேற்று விடுமுறை என்பதால் பெரும்பாலான தொழிலாளர்கள் வேலைக்கு வரவில்லை.
நேற்று அந்த வழியாக சென்ற ஆலை காவலர் பார்த்தபோது பெருமாள் சாமி உயிரிழந்தது தெரிய வந்தது. தகவலின் பேரில் கீழராஜ குலராமன் போலீசார் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆலை வளாகத்தில் குவிந்தனர்.
100-க்கும் மேற்பட்டோர் ஆலை வளாகத்தில் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இறந்த பெருமாள் சாமியின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்காமல் உடலை எடுத்துச் செல்ல உறவினர்கள் மறுத்து
வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியை அடுத்து உடலை எடுத்துச் செல்ல உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். பின்னர் அவரது
உடலை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து கீழ ராஜகுல ராமன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
