தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர், செப்- 27. உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் பெரிய கோவிலினை பார்வையிட வருகை புரிந்த சுற்றுலா பயணிகளை பாரம்பரிய முறைப்படி வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்ட உதவி ஆட்சியர் உத்கர்ஷ் குமார் சுற்றுலா பயணிகளுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். இதில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, மொரிஷியஸ், சிங்கப்பூர், மலேசியா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளை சார்ந்த சுற்றுலாப் பயணிகள் கலந்து கொண்டனர். முன்னதாக நாதஸ்வரம் இசையுடன் சுற்றுலாப் பயணிகளுக்கு சந்தனம் மற்றும் குங்குமம் வைத்து, மலர் மற்றும் இனிப்புகள் வழங்கி வரவேற்கப்பட்டனர்.
தொடர்ந்து தஞ்சாவூர் பெரிய கோவிலில் தூய்மை முகாம் நடைபெற்றது. இம்முகாமில் சுவாமி விவேகானந்தா கலைக் கல்லூரி, மருதுபாண்டியர் கலை கல்லூரி, கரந்தை உமா மகேஸ்வரனார் கலைக்கல்லூரி, பான் செக்கர்ஸ் மகளிர் கலைக் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்று வளாகத்தை தூய்மை செய்தனர்.
இந்நிகழ்வில் துணை ஆட்சியர் பயிற்சி சங்கரநாராயணன், இந்திய தொல்லியல் துறை பாதுகாப்பு அலுவலர் விக்னேஷ், அரண்மனை தேவஸ்தான செயல் அலுவலர் மாதவன், தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழும ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாலையில் தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் கோல போட்டியும், தஞ்சாவூர் பெரிய கோவில் வளாகத்தில் கிராமிய கலை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.