அலங்காநல்லூர்,
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள ஆதனூர் ஊராட்சியில் ஶ்ரீ முத்தாலம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடந்த இந்த யாகசாலை பூஜையில் மங்கள இசை முழங்க அனுக்கை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, அதனை தொடர்ந்து முதல் கால யாகவேல்வி ஆரம்பமாகி மூலமந்திர ஹோமம், பூர்ணாஹுதி தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து இரண்டாம் கால யாக பூஜையுடன் கோபூஜை, மண்டப பூஜையை தொடர்ந்து கடம் புறப்பாடாகி கோவிலை சுற்றி வலம் வந்து பின் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு பூஜை மலர்களும், பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. இதில் சுற்று வட்டாரங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக கிராம கோவில் ஜல்லிக்கட்டு காளை அலங்கரிக்கப்பட்டு கோவில் முன்பு நிறுத்தப்பட்டு அதற்கு மலர்மாலை, கைத்தறி துண்டு, அணிவிக்கப்பட்டு கும்பாபிஷேகபுனித நீர் தெளிக்கப்பட்டது.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை ஆதனூர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.