பெரம்பலூர் மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (11.11.2024) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கே வந்து அவர்களின் கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பெற்றுக்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து, முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்கள், கடந்த வாரங்களில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் போன்ற நிகழ்வுகளில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், ஒரு மாதத்திற்கு மேலாக நடவடிக்கை எடுக்கப்படாத மனுக்களின் விவரங்களையும், எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளையும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தொழில் தொடங்க கடன் உதவி, வீட்டுமனைப்பட்டா, விதவை உதவித்தொகை, ஆதரவற்ற விவசாயக் கூலி உதவித்தொகை, பட்டா மாறுதல், கல்விக் கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல், கலைஞர் மகளிர் உரிமை தொகைத் திட்டம், கலைஞர் கனவு இல்லம் திட்டம், அடிப்படை வசதிகள் கோருதல் உட்பட பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுத்து அவற்றை நிறைவேற்றுவதற்கு அரசு அலுவலர்கள் முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிட வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து 323 மனுக்கள் பெறப்பட்டன.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல் பிரபு, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் கார்த்திக்கேயன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ரெ.சுரேஷ்குமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.