மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.6000 வழங்க வேண்டும் என்று உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு, தமிழ்நாடு அரசு குறைந்தபட்ச ஆதார விலையாக டன் ஒன்றுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், கோரிக்கை வலியுறுத்தி நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு (31.12.2024) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இச்சங்கத்தின் மாநிலத் தலைவர் R. வேலுசாமி தலைமை வகிக்க கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் திமுக அரசு கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு 4 ஆயிரம் ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்படும் என அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாததைக் கண்டித்து, கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மேலும் தற்போது, பல்வேறு உற்பத்தி செலவினங்கள் மற்றும் விலை உயர்வு காரணமாக விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலையாக டன் ஒன்றுக்கு 6000 ரூபாய் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.

தற்போது கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலை நிர்வாகம் 3 ஆயிரத்து 151 ரூபாய் மட்டுமே வழங்கி வருவதால், தமிழகத்தில் கரும்பு விவசாயிகள் சாகுபடி பரப்பை குறைத்து விட்டனர் என்றும், தற்போதுள்ள சூழ்நிலை கருத்தில் கொள்ளும்போது கரும்பு சாகுபடி செய்யும் தமிழக விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக அரசு 2024-25-ம் ஆண்டு அரவை பருவத்திற்கு கரும்பு டன் ஒன்றுக்கு 6 ஆயிரம் ரூபாய் விலை உயர்த்தி வழங்க வேண்டும். இல்லையெனில் வருகின்ற நிதிநிலை அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யும்போது இச்சங்கம் சார்பில் சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்தில், கரும்பு விவசாயிகள் விவசாயிகள் சங்கத்தினர் ஆகியோர் ஈடுபடுவோம் என்றும் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் R. வேலுசாமி தெரிவித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்கத்தின், மாநில பொருளாளர் S. இராஜேஷ், மாவட்டத் தலைவர் R. பொன்னுசாமி, விவசாயிகள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *