C K RAJAN
Cuddalore District Reporter
9488471235
மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் 3ஆம் கட்ட சிறப்பு முகாம்களை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் துவக்கி வைத்து, 682 பயனாளிகளுக்கு ரூ.3.59 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டத்திற்குட்பட்ட இறையூர் காலனி, தொளார் காலனி, கொடிக்களம் காலனி, ஆவினங்குடி காலனி, ஆதமங்கலம் (சாத்தநத்தம் காலனி) ஆகிய இடங்களில் நடைபெற்ற “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் 3ஆம் கட்ட சிறப்பு முகாம்களை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் நேற்று துவக்கிவைத்து, 682 பயனாளிகளுக்கு ரூ.3.59 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தெரிவித்ததாவது,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்றதுமுதல் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக பெண் குழந்தைகள் படித்தால் தான் ஒரு குடும்பம் முன்னேறும், ஒரு குடும்பம் முன்னேறினால் ஊர் முன்னேறும், ஊர் முன்னேறினால் நாடு முன்னேறும் என்பதை நன்கறிந்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளின் உயர்கல்வியை ஊக்குவிப்பதற்காக புதுமைப்பெண் திட்டத்தினை துவக்கிவைத்ததன் மூலம் மாதந்தோறும் ரூ.1,000 மாணவிகளின் வங்கி கணக்கில் வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமன்றி அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் உயர்கல்வியை ஊக்குவிப்பதற்காக மாதம் ரூ.1,000 வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தினையும் செயல்படுத்திவருகிறார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டில் அன்றாடம் அரசு துறைகளை அனுகும் பொதுமக்களுக்கு அரசு அலுவலர்கள் வழங்கும் சேவைகளை எளிமைப்படுத்தும் வகையிலும், அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் பொதுமக்களுக்கு சென்று சேரும் வண்ணம் “மக்களுடன் முதல்வர்” என்ற சிறப்பு திட்டத்தினை தொடங்கி வைத்ததை தொடர்ந்து, கடலூர் மாவட்டத்தில் 18.12.2023 முதல் 06.01.2024 வரை நகர்ப்புற பகுதிகளில் 60 முகாம்களும், 11.07.2024 முதல் 31.08.2024 வரை ஊரக பகுதிகளில் 91 முகாம்களும் நடத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் “மக்களுடன் முதல்வர் முகாம் 3-ஆம் கட்டம்” என்ற சிறப்புத்திட்டத்தினை ஊரகப்பகுதிகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அறிமுகப்படுத்தியுள்ளார். இத்திட்டத்தில் மக்கள் இருக்கும் இடங்களிலேயே அனைத்து துறை அலுவலர்களுடன் முகாம்களை நடத்தி பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற அரசினால் அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் 9 சட்ட மன்ற தொகுதிகளிலும் முகாம்கள் நடைபெற்று வருகிறது.
மேலும், மூன்றாம் கட்டமாக தினந்தோறும் வேலைசெய்யும் கூலி தொழிலாளிகள், பொதுமக்கள் இம்முகாம்களில் கலந்துகொண்டு முதலமைச்சரின் காப்பீட்டு அட்டை, குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டை திருத்தங்கள், உதவித்தொகை விண்ணப்பங்கள் உள்ளிட்ட பல்வேறு மனுக்களை அளித்து பயனடையலாம் என மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலவலர் ம.இராஜசேகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் இரா.சரண்யா கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் இளஞ்செல்வி, மாற்றுத்திறனாளி நல அலுவலர் பாபு, தாட்கோ அலுவலர் லோகநாதன்,உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) விருத்தாசலம் முருகன், விருத்தாசலம் வருவாய் வட்டாட்சியர் உதயகுமார். உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.